“கையில் நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்தியிருந்தால் என்னை எளிதில் சந்திக்கலாம்” என்று ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சரத்குமார் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “நமது அடையாளமாகவும், குடும்ப அடையாளமாகவும் நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ ஒன்று வழங்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால், பச்சை குத்திக் கொண்டால் அது நமது குடும்பம் என்றாகிவிடும். கையில் அவ்வாறு பச்சை குத்தியிருந்தால் என்னை எளிதில் சந்திக்கலாம். அதேசமயம் இது கட்டாயம் அல்லது நிர்பந்தம் இல்லை. விரும்புபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுப் பச்சை குத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
சரத்குமாரின் இந்த பேச்சைத் தொடர்ந்து, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலர் கையில் பச்சை குத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
