மிசா சட்டத்தில் தந்தை வைகோ கைதானதால் தமக்கு மிசா என முதலில் பெயர் வைக்கப்பட்டது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகி இருக்கிறது.
இது தொடர்பாக நடிகரும் திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவருமான போஸ் வெங்கட் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: வைகோ தான் முதலில் சிறைசென்று இறுதியாக விடுதலையானார் என்று வைகோ மகன் துரை கூறியிருக்கிறார். அவருக்கு முதலில் மிசா என்று பெயர் வைத்ததாகவும் அதனால் அவர் அந்த பெயருக்குரியவர் என்றும் உரிமை கொண்டாடியுள்ளார். சரி இருக்கட்டும், துரை வைகோ (எ) மிசா சொல்வது உண்மையா?
- துரை தற்போது மக்களவை உறுப்பினர். பாராளுமன்ற இணையத்தளத்தில் இருக்கிற துரை பற்றிய தகவல் தவறாக இருக்க வாய்ப்பில்லை. பாராளுமன்ற ஆவணங்கள் படி துரை பிறந்தநாள் 02 ஏப்பிரல், 1972.
- மிசா சட்டத்தை அவசரநிலையாக குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி வழி இந்திரா காந்தி ஆட்சி பிரகடனம் செய்த நாள் 26 ஜூன் 1975. மேலுள்ள இரண்டு ஆவணங்கள் படி கணக்கிட்டால் அப்போது துரைக்கு மூன்று வயது.
- மூன்று வயது வரை பெயரில்லாமல் பிறப்பை பதிவாக்காமல் வைத்திருக்கவும் வாய்ப்பில்லை.
- பாராளுமன்றம் வெளியிட்ட உறுப்பினர்கள் குறிப்பேடு வைகோ திருமணம் நடைபெற்ற நாள் 14 ஜூன் 1971 என்று பதிவு செய்துள்ளது. ஆவணங்களில் உள்ள இத்தகவல் துரையின் பிறந்தநாள் தகவலோடு பொருந்துகிறது. ஆகவே ஆவணங்களில் உள்ள தகவல் பிழையாக இருக்க வாய்ப்பில்லை.
- மிசா அவசரகால பிரகடனம் நடைமுறைக்கு வந்த அறிவிப்பிற்கு முன்னரே பிறந்தவர் துரை வைகோ. அந்த அறிவிப்பிற்கு முன்னர் மிசா சட்டம் பாராளுமன்றத்தில் 2 ஜூலை, 1971 அன்று இயற்றப்பட்டது. வைகோ திருமணம் நடைபெற்ற இரண்டு கிழமைகளுக்குப் பிறகு அது நடைபெற்றது.
- திமுக ஆட்சி 31 சனவரி, 1976ல் கலைக்கப்பட்டது. அதையெட்டி பலர் மிசாவில் கைது செய்யப்பட்டனர். வைகோ 1 பிப்ரவரி, 1976ல் கைதுசெய்யப்பட்டார். பிப்ரவரி 2, 1977ல் அவர் விடுதலையானார். வைகோ பற்றிய இத்தகவல் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய ஆவணத்தில் பதிவாகியுள்ளன.
- மிசாவில் இறுதியாக விடுதலையானவர்கள் 21 மார்ச், 1977ல் வெளிவந்தனர். அதில் மு.க.ஸ்டாலினும் ஒருவர். ஆகவே துரை வைகோ மிசாவைப் பற்றி பேசியவை பொய்யானவை அல்லது திமுக, மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்பில் இட்டுகட்டி பேசிய பொய்கள்.
வைகோவின் வீழ்ச்சி மகனது வாய்பேச்சில் இருக்கிறது. தற்போதைய அரசியல் எவ்வளவு குரூரமான பொய்களோடு சதுரங்க ஆட்டம் ஆடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இவ்வாறு போஸ் வெங்கட் பதிவிட்டுள்ளார்.
