மத்திய பட்ஜெட் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி (Indira Gandhi) முதல் முறையாக பட்ஜெட்டை (Budget) தாக்கல் செய்தார். பின்னர், பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று, பட்ஜெட் தாக்கல் செய்வதில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அவர்2026 பிப்ரவரி 1 அன்று தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும், இந்த பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுவது, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகும்.
இந்தியாவின் பொருளாதாரப் பாதையை நிர்ணயிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்வது ஒரு முக்கியமான பணியாகும். இந்த முக்கியப் பொறுப்பை ஆண்கள் மட்டுமே வகித்து வந்த நிலையில், இரண்டு பெண்கள் இந்தியாவின் நிதி வரலாற்றில் தடம் பதித்துள்ளனர்.
இந்திரா காந்தி: முதல் பெண்!
இந்திய பட்ஜெட்டை முதன்முதலில் தாக்கல் செய்த பெண் இந்திரா காந்தி ஆவார். 1969 ஜூலை மாதம் அவர் பிரதமராக இருந்தபோதே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார். மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்தது. 1970 பிப்ரவரி 28 அன்று, அவர் நாடாளுமன்றத்தில் 1970-71ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அவரது கொள்கைகள் சோசலிச வளர்ச்சி மற்றும் விவசாய தன்னிறைவை மையமாகக் கொண்டிருந்தன. அப்போது நாடு அதிக பணவீக்கத்துடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதே அவரது நோக்கமாக இருந்தது.
நிர்மலா சீதாராமன்: சாதனை மேல் சாதனை
இந்திரா காந்திக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கு எந்தப் பெண்ணும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால், 2019இல் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று இந்த நிலையை மாற்றினார். அன்றிலிருந்து, அவர் பட்ஜெட் தாக்கல் செய்வதை ஒரு வரலாற்று மைல்கற்களாக மாற்றியுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமை ஒரு வரலாறு:
2026 பிப்ரவரி 1 அன்று, நிர்மலா சீதாராமன் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்க உள்ளார். அவர் தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் இவ்வளவு நீண்ட தொடர்ச்சியான பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நபர் என்ற பெருமையை அவர் பெறுவார். சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதனால், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பட்ஜெட்டிற்காக நாடாளுமன்றம் வார இறுதியில் கூடுகிறது.
