’இன்னும் மூணு வருஷத்துக்கு நடிக்க வரமாட்டார்’, ‘ஆக்டிங்ல இருந்து ரிட்டயர்டு ஆயிட்டார்’, ‘இந்த ஒரு படம் தான் அவருக்கு இருக்குது’ என்ற பேச்சுகளுக்கு நடுவே, மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு மத்தியில் முகம் காட்டியிருக்கிறார் இந்தி நடிகர் அமீர்கான். ‘லால் சிங் சத்தா’வின் பெருந்தோல்விக்குப் பிறகு, அவர் நடித்த ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் பெரிய எதிர்பார்ப்புகள் இன்றி வெளியாகவிருக்கிறது. aamir khan in lokesh kanagaraj film
இதையொட்டி அமீர்கான் அளித்த பேட்டியொன்றில், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து பேசியிருக்கிறார். அப்போது, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தான் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ’அதுவொரு சூப்பர் ஹீரோ கதை. ஆக்ஷன் படமாக அமையும் அதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிற்பாதியில் இருக்கக்கூடும்’ என்று கூறியிருக்கிறார்.
இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில், அட்லீக்குப் பிறகு இந்தி திரையுலகைக் கலக்கவிருக்கிற இன்னொரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உருவெடுக்கும் வாய்ப்புகள் அனேகம்.
சூர்யாவை நாயகனாகக் கொண்டு ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்கவிருப்பதாகச் சில ஆண்டுகளாகக் கூறி வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஒருவேளை அந்தக் கதையில்தான் அமீர்கான் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.
இந்த பேட்டியின்போது, ‘பிகே படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்கள் பொய்’ என்று கூறியிருக்கிறார் அமீர்கான். அதே நேரத்தில், தாதா சாஹேப் பால்கேவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைப் படமாக எடுக்கும் முயற்சியில் தானும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் ஈடுபட்டு வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், மகாபாரதக் கதையைப் படமாக எடுக்கிற முயற்சியைத் தொடங்கியிருப்பதாகவும், அது தனது 25 ஆண்டு காலக் கனவு என்றும் கூறியிருக்கிறார் அமீர்கான்.
கடந்த 20 ஆண்டுகளில் அவர் நடித்து ‘ப்ளாக்பஸ்டர்’ ஆன படங்கள் என்று 3 இடியட்ஸ், தில் சாஹ்தா ஹை, சர்பரோஷ் படங்களைச் சொல்லலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான திரையனுபவத்தைத் தந்தவை. ‘எந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டால், அதில் நடிக்கத் தயாரக இருக்கிறீர்கள்’ என்ற கேள்விக்கு இம்மூன்றையும் குறிப்பிட்டிருக்கிறார் அமீர்கான்.
’அப்படியென்ன அந்த படங்களில் இருக்குது’ என்பவர்கள், அவற்றை ஒருமுறை பார்த்தால் அமீர்கானின் கதைத்தேர்வு குறித்து வியப்பது உறுதி..!
