ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ஷேக் முகமத். இவர் பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்று விட்டு கடந்த சனிக்கிழமை அன்று இன்டர்சிட்டி ரயிலில் கோவை திரும்பினார். அப்போது சென்னையில் சட்ட கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி ஷேக் முகமத் அருகில் அமர்ந்து கோவைக்கு வந்தார்.
அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தபோது அருகே அமர்ந்து இருந்த காவலர் ஷேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.
இது குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் முகமத்தை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கி விட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இது குறித்து அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து கோவை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இருந்து ஷேக் முகமத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஓடும் ரயிலில் பெண்ணிற்கு காவலர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் மாணவி துணிச்சலுடன் புகார் அளித்தது குறித்து காவல்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதைதொடர்ந்து ஷேக் முகமத்திடம் காவல்துறையினர் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
