உதகை அருகே ஆவின் ஆலையில் நுழைந்த கரடி அங்கிருந்த பால் மற்றும் நெய்யை ருசி பார்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், சாலையோரங்களிலும், சுற்றுலா தலங்களிலும் உலா வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உதகை – குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சவுத்விக் பகுதியில் ஆவின் பால், நெய், வெண்ணெய், தயிர் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வருகிறது.
இந்நிலையில் இரவு உணவு தேடி உலா வந்த கரடி ஒன்று ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் உள்ளே புகுந்து பால், நெய் போன்ற பொருட்களை ருசி பார்த்துள்ளது.
இது குறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கரடியை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
