தொழிலாளர் வருகால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), 34 கோடி பேரின் பிஃஎப் (PF) கணக்குகளில் 8.25% வட்டியை ஜூலை 15-க்குள் செலுத்த உள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் இன்று (ஜூலை 8) செய்தியாளர்களிடம் கூறுகையில், “2025-26 நிதியாண்டிற்கான 8.25% பிஎப் வட்டித் தொகை, ரூ.1.44 லட்சம் கோடி, 34 கோடி உறுப்பினர்களின் கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த வட்டித் தொகை முதலில் ‘ஆட்டோ-பிராசஸ்’ (தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு) செய்யப்படும். அதன்பின், கள அதிகாரிகள் அதைச் சரிபார்த்த பிறகு, உறுப்பினர்களின் கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படும்” என்றார்.
மேலும், ”உறுப்பினர்களின் பதிவுகள் அனைத்தும் புதிய தரவு தளத்திற்கு மாற்றும் நடைமுறை முடிந்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த உறுப்பினர் வலைதளத்திற்கு எளிதில் உறுப்பினர்கள் செல்லவும், அதில், உறுப்பினர் அந்தஸ்துக்கான விவரங்கள், பிஎப். கையிருப்புகள், பிற பலன்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எளிதில் பார்வையிட முடியும்” என்றும் கூறினார்.
இந்த வட்டி விகிதப்படி ஒருவரை பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் மொத்த சேமிப்பாக இருந்தால், அவருக்கு வட்டித் தொகையாக மட்டும் 8,250 ரூபாய் கணக்கில் சேரும்.
2 லட்சம் ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு 16,500 ரூபாயும், 5 லட்சம் ரூபாய் வரை பிஎப் கணக்கில் பணம் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு 41,250 ரூபாயும் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.
2024-ம் ஆண்டு பிப்ரவரியில் , பிஎப் வட்டி 8.15 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
