கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை- சிபிஐ விசாரணை கோரும் நயினார் நாகேந்திரன்

Published On:

| By Mathi

3 Tamils Shot Dead in Karnataka: TN BJP Demand CBI Probe

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹானூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா (Shagya) வனப்பகுதியில், மான்களை வேட்டையாடியதாகக் கூறி, ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று தமிழர்களை, கர்நாடக வனத்துறையினர் சுட்டுப் படுகொலை செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

கர்நாடக அரசு கூறுவதை போல, ஒருவேளை அவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் கூட, அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது தான் வனத்துறையினரின் பணியே தவிர, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு கொடூரமாக அவர்களை இப்படி தண்டிப்பது அல்ல. அதிலும், சுட்டுக் கொல்லப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்களும், விவசாயிகள் எனவும், பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வனத்துறையினர் அவர்களை அநியாயமாக கொலை செய்துவிட்டதாகவும் அவர்களது உறவினர்கள் கதறுவதைப் பார்த்தால், கர்நாடக அரசின் மீது கனத்த சந்தேகம் எழுகிறது.

எனவே, தமிழக முதல்வர் விஜய் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு, இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசால் தகுந்த இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதுமட்டுமன்றி தமிழக அரசின் சார்பாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் இழப்பீட்டு தொகையாக வழங்க வேண்டுமென முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share