முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் அமைச்சர்கள் சிலர் இப்போது லஞ்சம் வாங்க தொடங்கி இருக்கின்றனர்; அவர்களது ஆடியோ தம்மிடம் உள்ளது என வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று ஆகஸ்ட் 16-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது: ஆட்சிக்கு வந்து இன்னைக்கு 100 நாள் கூட ஆகவில்லை; செய்யட்டும், பார்ப்போம். சில விஷயங்களைச் சரியா செய்றாங்க, சில விஷயங்களைத் தவறா செய்றாங்க. தவறுகள் செய்யும் பொழுது நாம் சுட்டிக்காட்டுகின்றோம்; அதையும் சில இடத்துல திருத்திக் கொண்டிருக்காங்க.
அரசு செய்யக்கூடிய வேலையை நாம செக் பண்ணி அவர்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கிறோம். டாஸ்மாக் கடைகள் எத்தனை இன்னும் 500 மீட்டருக்குள்ள இருக்கு? அதையும் அரசு ஆமோதித்து நடவடிக்கை எடுக்கிறாங்க; அதை நான் நிச்சயமாகப் பாராட்டுகின்றேன். அது நல்ல ஒரு அரசியல் போக்கு.

ஒரு வருட காலம் தப்பு பண்றாங்கன்னா நம்ம பேசுவோம்ங்க ஐயா. இன்னைக்கு எனக்குத் தெரியும், தமிழகத்தில் எதிர்க்கட்சி நண்பர்கள் நிறைய பேர் நம்மளைப் பார்த்து சொல்றாங்க, ‘அண்ணே நீங்க அரசியலே பண்ணலை’ன்னு.
இன்னைக்கு எதிர்க்கட்சி பண்ணக்கூடிய அரசியல் என்னன்னா, எப்படியாவது இந்தக் ஆளுங்கட்சியைக் கவிழ்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் செய்யக்கூடிய அரசியலா இருக்கு. அதுக்கு ‘ஆபரேஷன் மெகாலயா’ன்னு ஒரு பேரு… பிள்ளை பிடிக்கிற மாதிரி 10 எம்எல்ஏ-வை பிடிச்சிட்டு வாங்க, அவங்களைச் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குக் கொண்டு போங்க, அதுல ஆட்சியை கவிழுங்க.
ஐயா, தப்பா ஆட்சி பண்ணா ஆட்சியை கவிழ்த்துவிடுங்கள் ஐயா. ஒரு வருஷம் எல்லாரும் நேரம் கொடுங்க. எதற்குத் காலில் வெந்நீரை ஊற்றியது போல எல்லாம் அப்படி சுத்திக்கிட்டே இருக்கீங்க? வேலை செய்யட்டும்.

முதலமைச்சர் விஜய் அவர்கள் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மைதான்; அதையும் நாம் பார்க்கின்றோம். பெரிய பெரிய டெண்டர்களில் வாங்கல, சில அமைச்சர்கள் இப்பதான் வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. சில அமைச்சர்கள் சொல்றாங்க, என்கிட்ட ஆடியோவே இருக்கு… அவங்க எல்லாம் ஓட்டுக்குக் பணம் கொடுக்காமல் வந்துட்டாங்க, ‘தம்பி, நாங்க எல்லாம் ஓட்டுக்குக் பணம் கொடுத்து வந்தோம், ஒரு 2% கொடு தம்பி, 3% கொடு தம்பி, 4% கொடு’னு.
இது முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்கு இப்பதான் கொண்டு வர்றேன் ஐயா. ஒரு வருஷம் கழிச்சு நாங்க பிரச்சனை பண்றதுக்கு முன்னாடி, நீங்க எப்படி இருக்கீங்களோ அதை உங்களுடைய அமைச்சர் பெருமக்களுக்கும் வலியுறுத்துங்க.
நேர்மையான ஆட்சி, நீங்க நேத்து சுதந்திர தின உரையில சொன்னீங்க, தமிழகத்தில் ஊழலை நம்முடைய காலத்துல ஒழிப்போம். நம்முடைய காலத்துல அந்த ஊழலை ஒழிப்போம், நம்மால் முடியும். கொஞ்சம் கடிவாளம் போடுங்க ஐயா, லூசா விட்டுடாதீங்க. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமையும் ரிவ்யூ மீட்டிங் எடுங்க. ரெண்டு நாள் விடுப்பு எடுத்தீங்கன்னா அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் குளிர் விட்டுப் போயிரும். கண்ட்ரோல்ல வைங்க. குதிரைக்கு எப்பொழுதுமே கடிவாளத்தை கொஞ்சம் லூசா விட்டுட்டீங்கன்னா, குதிரை வலது பக்கம், இடது பக்கம் போகும். மக்கள் உங்கள் மீது பெரிய நம்பிக்கையோடு அந்த இடத்தை கொடுத்திருக்காங்க; நீங்கள் தவறு செய்யாமல் அதைச் சரியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளையும் இந்த நேரத்துல சொல்வது என்னுடைய கடமையாக நான் கருதுகின்றேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
