14 வயதான சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 14 year old Vaibhav Suryavanshi set new record
ஜெய்ப்பூரில் நேற்று (ஏப்ரல் 28) இரவு நடந்த 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் குவித்தார். ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார். சாய் சுதர்சன் 39 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை மீண்டும் கைப்பற்றினார்.
இமாலய இலக்கை ராஜஸ்தான் எட்டி பிடிக்குமா என்ற நிலையில், ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கினார் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி.
வழக்கத்திற்கு மாறாக ஜெயஸ்வால் பொறுமையோடு விளையாட, வெறும் 17 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார் சூர்யவன்ஷி. அதன்பின்னரும் சிக்ஸர் மட்டுமே அடிப்பேன் என அதிரடி காட்டிய அவர், வெறும் 35 பந்தில் சதமடித்து அசத்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த வயதில் (14 ஆண்டுகள் 32 நாட்கள்) சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் குறைந்த பந்தில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். அவருக்கு முன்னதாக கிறிஸ் கெயில் (வெஸ்ட் இண்டீஸ்) 30 பந்துகளில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய அவர் 11 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு பக்கம் பொறுமையாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் அரைசதம் (70*) கடந்தார்.
அவருடன் இறுதியில் பாரக்கும் (32*) இறங்கி குஜராத் வீரர்களின் பந்துகளை பறக்கவிட, ராஜஸ்தான் அணி வெறும் 15.5 ஓவர்களில் 212 ரன்கள் குவித்து வெற்றியை ருசித்தது.
இந்த வெற்றியின் மூலம் கடந்த 5 போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவி வந்த ராஜஸ்தான் அணி சூப்பர் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் 265 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 38 பந்துகளில் 101 ரன்கள் குவித்த சூர்ய வன்ஷி ஆட்டநாயகன் விருது பெற்றார்.