காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர், இன்று மதியம் முகநூலில் போட்டோ ஒன்று வெளியிட்டார். அதில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தேர்தல் 2016ல் ஆதரிப்பீர் ஜோதிமணி என்று போடப்பட்டு, அவரது படம் இடம்பெற்றிருந்தது. இவர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாகவே அரவக்குறிச்சி பகுதியில் மக்களைச் சந்தித்து வருகிறார். அதுதொடர்பான படங்களையும் அவ்வப்போது முகநூலில் பகிர்ந்துவந்தார். கடந்தமுறை, கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், தற்பொழுது அரவக்குறிச்சியில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. சமீபத்தில்தான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உறுதியானது. அந்தக் கூட்டணிக்குள் தேமுதிக வருமா, வராதா? என்ற கேள்விக்கே இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை.காங்கிரஸுக்கு எத்தனை தொகுதி, அதில் எந்தெந்தத் தொகுதி என்ற பல கேள்வி எழுந்திருக்கும்போது, ‘ஆதரிப்பீர் அரவக்குறிச்சி’ என்று ஜோதிமணி வெளியிட்டிருக்கும் போட்டோ, திமுக-வில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அந்தத் தொகுதி திமுக வசம் உள்ள தொகுதி. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.சி.பழனிச்சாமியின் தொகுதி அது. இந்நிலையில், காங்கிரஸுக்கே அந்தத் தொகுதி ஒதுக்கப்படுமா? என்று தெளிவாகத் தெரியாதநிலையில், ஜோதிமணி இவ்வாறு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
