சருமம் இயற்கையாக பளபளக்க இந்த ஆறு உணவுகளை நாள்தோறும் சாப்பிட்டாலே போதுமானது.
பெண்கள், ஆண்கள் என அனைத்து தரப்பினருமே பொலிவான பளபளப்பான சருமத்தையே விரும்புகிறார்கள். அதனால் அனைவரும் சருமப் பராமரிப்பையே அதிகமாக விரும்புகிறார்கள். காற்று மாசு தற்போதைய கால கட்டத்தில் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் கட்டாயம் சரும பராமரிப்பு என்பது தேவைப்படுகிறது. தங்கள் சருமத்தை பராமரிக்க விலை உயர்ந்த க்ரீம்கள் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால், அது அவர்களின் சருமத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவது இல்லை.
ஏனெனில் சரும பளபளப்பிற்கு வெளியே மட்டும் அல்ல, உடலுக்குள்ளும் பராமரிப்பு தேவை. ஏனெனில் நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் நமது சருமமும் அதனை வெளிப்படுத்தும். ஆக, சருமத்தை நாம் குறிப்பிட்ட உணவுகள் எடுத்துக்கொள்வதன் மூலமாகவே பொலிவாக மாற்றலாம். சருமத்தை பளபளப்பாக்கும் உணவுப் பொருட்களை பார்க்கலாம்.
நெல்லிக்காய்: நாள்தோறும் உங்கள் உணவில் ஒரு சிறிய அளவு நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துகள் நிறைந்துள்ளன. இயற்கையாகவே இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாப்பிடுவது பருக்கள், தழும்புகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும். நெல்லிக்காயை நாள்தோறும் சாப்பிடுவது சருமத்தை தெளிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
மாதுளை: மாதுளைப் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சருமத்திற்கு ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. மாதுளை சாப்பிடுவது சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இயற்கையான பளபளப்புக்கு வழிவகுக்கிறது. மாதுளை சருமத்தில் உள்ள செல்களை சரிசெய்து, வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
பீட்ரூட்: பீட்ரூட் என்பது ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கிறது. குறிப்பாக இது உடலில் நச்சு நீக்க உதவுகிறது. மேலும் பீட்ரூட் உட்கொள்வதன் ரிசல்ட் சருமத்திலும் தெரியும். பீட்ரூட் ரத்தத்தை சுத்திகரித்து, முகப்பரு மற்றும் சரும பாதிப்பு பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. பீட்ரூட் சாப்பிடுவது சருமத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறத்தை அளித்து நிறத்தை மேம்படுத்துகிறது.
தக்காளி: தக்காளியில் லைகோபீன் அதிகளவில் உள்ளது, இது தீங்கு விளைவிக்கும் சூரியக் கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இது எண்ணெய் பசை சருமத்தை சமநிலைப்படுத்தவும் , திறந்திருக்கும் துளைகளை சுருக்கவும் உதவுகிறது. தொடர்ந்து தக்காளி சாப்பிடுவது சருமத்தில் கரும்புள்ளிகளைக் குறைக்கும். தக்காளி சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஆப்பிள் பழம்: ஆப்பிள் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்கவும், ஈரப்பதமாக வைத்திருக்கவும், வறண்ட சருமத்தைப் போக்கவும் உதவுகின்றன. ஆப்பிள் சாப்பிடுவது உங்கள் சருமத்தை மென்மையாகவும், தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். நீங்கள் நிச்சயமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.
பப்பாளி: பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துகிறது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். தெளிவான சருமத்திற்கு நல்ல செரிமானம் அவசியம் என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும். பப்பாளியில் உள்ள பப்பேன் நொதிகள் இறந்த சரும செல்களை அகற்றுவதற்கு உதவுகின்றன. பப்பாளி சாப்பிடுவது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது மற்றும் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்கிறது. என்ன மக்களே அப்ப இனி தினமும் மேற்கொண்ட ஆறு பழங்களில் ஒன்றையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
