டிஜிட்டல் திண்ணை: பாஜகவின் எதிரி யார்? சந்தோஷ் சொன்ன டெல்லி மெசேஜ்! அண்ணாமலை ஷாக்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாடு பாஜகவின் மையக்குழு கூட்டம் கமலாலயத்தில் நடந்தது பற்றிய ஊடகச் செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றை ஒரு முறை பார்வையிட்டுவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“அதிமுக- பாஜக கூட்டணி முறிந்த பிறகு இது குறித்து பாஜகவின் தேசிய தலைமை இதுவரை அதிகார பூர்வமாக எவ்வித கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் அக்டோபர் 10ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜகவின் மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முக்கிய அம்சமே கூட்டணி முறிவுக்கு பிறகு தமிழகத்தில் நடைபெறுகிற நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளரான பி. எல். சந்தோஷ் வருகை தந்தது தான். சந்தோஷ் நேற்று இரவே சென்னைக்கு வந்து விட்டார் என்பதை அவர் வந்த சில நிமிடங்களிலேயே மின்னம்பலம் செய்தியாக வெளியிட்டது. நேற்று இரவு சென்னை வந்த சந்தோஷ் கமலாலயத்திலேயே தங்கினார்.

இன்று காலையில் தமிழக பாஜக பூத் கமிட்டிகள் அமைப்பதில் எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பது குறித்தும்… ஏற்கனவே ஒன்பது தொகுதிகளில் தேர்தல் வேலைகளை விரைவுப்படுத்த திட்டமிட்டது எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்டோரோடு கலந்து ஆலோசித்தார்.

இதன் பிறகு பிற்பகலில் மையக்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில துணை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் மேற்கொண்டு வரும் நடை பயணம் பற்றி விளக்கியிருக்கிறார். மீண்டும் அந்த ஒன்பது தொகுதிகள் நிலவரம் பற்றி ஆலோசனை செய்தார் சந்தோஷ். இதன் பிறகு ஒவ்வொரு தலைவரிடமும் கட்சி வளர்ச்சி பற்றி அவரவர் கருத்துக்களை கேட்டறிந்தார். இதற்குப் பின் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது பற்றி அறிவுரைகளை வழங்கிய சந்தோஷ், ‘நமது எதிரி தேசிய அளவில் காங்கிரஸ். மாநில அளவில் திமுக. இதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது தேசிய தலைமை 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலில் கூட்டணி யாரோடு என்பது பற்றி எல்லாம் சிந்திக்க இன்னும் அவகாசம் இருக்கிறது. எனவே கட்சியை பலப்படுத்துங்கள்’ என்று  ஆலோசனை கொடுத்துவிட்டு கூட்டத்தை நிறைவு செய்தார் சந்தோஷ்.

பாஜக வின் எதிரி தேசிய அளவில் காங்கிரஸ், மாநில அளவில் திமுக என்று சந்தோஷ் கூறிய நிலையில் அப்படி என்றால் அதிமுகவை இன்னும் ஏதோ ஒரு சாஃப்ட் கார்னரில் தான் பாஜக வைத்திருக்கிறதா என்ற கேள்வி இயல்பாகவே கட்சி நிர்வாகிகள் இடையே எழுந்துள்ளது.  அதிமுக ஏற்கனவே கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என்பதை உறுதிப்படுத்திவிட்ட நிலையில், சந்தோஷின் இந்த குறிப்பு அடுத்த கட்ட அரசியல் பரபரப்புகளுக்கு வித்திட்டுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

VIVO Pro Kabaddi ஏலம்: மீண்டும் பவன் ஷெராவத் புதிய வரலாறு!

நடிகர் நாசர் தந்தை மறைவு…. முதல்வர் இரங்கல்!

வெளியானது ஏசஸின் புதிய கேமிங் மானிட்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share