செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில் கடந்த ஜூலை 14ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் வாதாடிய அமலாக்கத்துறை… “செந்தில் பாலாஜி மட்டுமல்ல அவரது தம்பி அசோக் குமாருக்கும் நாங்கள் சம்மன் அனுப்பினோம். இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இப்போது தனக்கு இதய பிரச்சினை இருப்பதாக கூறி நான்கு வார காலம் அவகாசம் கேட்கிறார். அமலாக்கத் துறையை எதிர் கொள்வதற்கு பதிலாக இதய பிரச்சினை என்று சொல்வது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது” என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.
அதே நேரம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் எங்கே என்று அமலாக்கத்துறை தொடர்ந்து தனது விசாரணையை முடுக்கிவிட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று திரும்பிய நிலையில்… விமான நிலையத்தில் அவரிடம் கேள்வி கேட்ட ஒரு நிருபர், ‘நீங்களும் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கும் லண்டனில் சந்தித்ததாக ஒரு தகவல் வருகிறதே?’என்று கேட்க… கடும் கோபமானார் அண்ணாமலை. சுமார் ஐந்து நிமிடங்கள் அந்த செய்தியாளரை சரமாரியாக கேள்வி கேட்டு வறுத்தெடுத்தார்.
இப்படியாக தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் எங்கே இருக்கிறார் என்பது கடந்த இரண்டு மாதமாகவே பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அசோக் குமாரின் சமீபத்திய இருப்பிடம் குறித்து கிடைத்திருக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்களில் இருந்தே தகவல்கள் கசிகின்றன.
“செந்தில் பாலாஜிக்கு பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் அசோக் கடந்த மே மாதம் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்ததிலிருந்து செந்தில் பாலாஜியை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று தொடர்ந்து லாபியில் ஈடுபட்டார்.
மே மாத கடைசி வாரத்தில் அவரை குறி வைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டின்போதும் அசோக் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.
அவர் லண்டனில் இருக்கிறார் பெங்களூருவில் இருக்கிறார் கரூரில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.
ஆனால் எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் படி அசோக் குமார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வந்த காவேரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.
அதை அடிப்படையாக வைத்து அவர் செந்தில் பாலாஜியை அவ்வப்போது சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக தீவிரமான ஆலோசனை செய்திருக்கிறார்.
இப்படி அண்ணனும் தம்பியும் சந்தித்து இருப்பதாக எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுதலை செய்தால் அவர் வழக்கின் ஆதாரங்களையும் சாட்சிகளையும் கலைத்து விடுவார் என்று நீதிமன்றத்தில் ஏற்கனவே முன் வைத்திருக்கிறோம்.
ஜாமீன் வழங்காத போதே இப்படியெல்லாம் நடக்கும் நிலையில் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் தேவைப்பட்டால் நீதிமன்றத்திலும் எடுத்துரைப்போம்” என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில்.