UPI மூலம் பணம் செலுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அல்லது பணப் பரிவர்த்தனை அமைப்புகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரூ.2,000 வரை கட்டணம் இல்லை
செப்டம்பர் 14-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகள் கட்டணமின்றி தொடரும். இந்த விதி பணம் அனுப்புபவர் மற்றும் பெறுபவர் என இரு தரப்பினருக்கும் பொருந்தும்.
அதேபோல், RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படாது.
பெரிய தொகை UPI பரிவர்த்தனைகளுக்கு என்ன?
இதுவரை UPI பரிவர்த்தனைகளுக்கு நடைமுறையில் இருந்த Zero-MDR முறையில் மாற்றம் செய்யும் பாதையை இந்த அறிவிப்பு திறந்துள்ளது. இதனால் ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் குறிப்பிட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எதிர்காலத்தில் Merchant Discount Rate (MDR) விதிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும், ரூ.2,000க்கு மேற்பட்ட அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் உடனடியாக கட்டணம் விதிக்கப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. கட்டணத்தின் அளவு மற்றும் எந்த வகையான வணிகப் பரிவர்த்தனைகளுக்கு அது பொருந்தும் என்பது குறித்து விரிவான உத்தரவு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்குமா?
பொதுமக்கள் மேற்கொள்ளும் தனிநபர் பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என மத்திய அரசு முன்பே தெளிவுபடுத்தியுள்ளது. எதிர்காலத்தில் MDR அறிமுகப்படுத்தப்பட்டாலும், குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட சில வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே குறைந்த கட்டணம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
