இந்தியா–சீனா உறவில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த பதற்றம் தற்போது மெல்ல தணிந்து வருகிறது. இந்தச் சூழலில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருவது பொருளாதார ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் விநியோகச் சங்கிலி தொடர்பான தடைகள் குறித்து பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது.
ரூ.112 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை
2025-26 நிதியாண்டில் சீனாவிலிருந்து இந்தியா 131.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இந்தியாவின் ஏற்றுமதி 19.5 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 112 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
இந்தப் பற்றாக்குறையை குறைப்பது இந்தியாவுக்கு முக்கியமான சவாலாக உள்ளது. குறிப்பாக சீனாவில் இந்திய மருந்துகள், வேளாண் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான பொருட்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
சீனாவை நம்பியிருக்கும் தொழில்கள்
வர்த்தகத்தைத் தாண்டியும், சில முக்கியமான தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கு இந்தியா சீனாவைச் சார்ந்துள்ளது. மின்சார வாகனங்கள், ஆட்டோமொபைல் மின்னணுவியல், தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்படும் நிரந்தர காந்தங்கள் இதற்கு முக்கிய உதாரணம்.
உரங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்களிலும் சீனாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இதனால் விநியோகச் சங்கிலியில் மாற்றம் கொண்டுவருவது இந்தியாவுக்கு உடனடியாக சாத்தியமான விஷயமாக இல்லை.
சீன முதலீட்டுக்கு புதிய வாய்ப்பு?
2020-க்குப் பிறகு சீன முதலீடுகளுக்கு இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போது சில துறைகளில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மின்னணு பாகங்கள், மூலதனப் பொருட்கள் மற்றும் சூரிய மின்கலங்கள் போன்ற துறைகளில் முதலீட்டை எளிதாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜி ஜின்பிங்கின் வருகை இந்தப் பாதையை மேலும் திறக்குமா என்பதே தொழில் வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் எல்லைப் பிரச்சினை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையின்மை இன்னும் நீடிப்பதால், வர்த்தக உறவில் உடனடி பெரிய மாற்றம் ஏற்படும் எனக் கூற முடியாது.
