இந்தியாவின் முன்னணி சிமென்ட் நிறுவனமான அல்ட்ராடெக் சிமென்ட் (UltraTech Cement) 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் அதிகரித்து ரூ. 3,000.02 கோடியாக உயர்ந்துள்ளதாக அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு ரூ. 240 என்ற மிகப்பெரிய ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த இந்நிறுவனம் கடந்த 2024-25 நிதியாண்டின் ஜனவரி – மார்ச் காலாண்டில் ரூ. 2,474.79 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 2025-26 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் செயல்பாட்டு வருமானம் ரூ. 25,799.47 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது ரூ. 23,063.32 கோடியாக இருந்தது. மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் தனது வரலாற்றிலேயே மிக அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
தென்னிந்திய நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் (ICL), பிர்லா ஒயிட் வால்கேர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவைத் தளமாகக் கொண்ட RAKWCT ஆகியவற்றைக் கையகப்படுத்தியதே இதற்குக் காரணம் ஆகும். அல்ட்ராடெக்கின் மொத்த செலவுகள் ரூ. 21,894.18 கோடியாக இருந்தது. இந்தக் காலாண்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையை பதிவு செய்ததாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மார்ச் காலாண்டில் அல்ட்ராடெக்கின் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ. 25,887.03 கோடியாக இருந்தது. 2025-26 முழு நிதியாண்டிற்கான அல்ட்ராடெக்கின் லாபம் ரூ. 8,188.35 கோடியாக இருந்தது. மார்ச் 31 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான மொத்த ஒருங்கிணைந்த வருமானம் ரூ. 89,089.04 கோடியாக இருந்தது. முழு ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த சிமெண்ட் விற்பனை 145 மில்லியன் டன்களாக இருந்தது.
சவாலான சூழல் இருந்தபோதிலும், அல்ட்ராடெக் நிறுவனம் விற்பனை அளவு, வருவாய், லாபம் மற்றும் இருப்புநிலைக் குறிப்பின் வலிமை உள்ளிட்ட அனைத்து செயல்திறன் அம்சங்களிலும் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ளது. இந்தச் சிறப்பான முடிவுகளால் ஊக்கமடைந்து, நிறுவனத்தின் வாரியம், பங்குதாரர்களுக்கு ரூ. 10 முகமதிப்புள்ள ஒரு பங்கிற்கு ரூ. 240 என்ற மிகப்பெரிய ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.
