தஞ்சாவூர் போலீசாரால் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேற்று இரவு சென்னை திரும்பியதும் அவரது தந்தையும் திமுக தலைவருமான முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்.
தஞ்சாவூர் விவசாயிகள் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தவெகவினர் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று காலை உதயநிதியை போலீசார் கைது செய்து தஞ்சாவூருக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
இதனிடையே உதயநிதியின் முன்ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், “ உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை” என்றார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் நேற்று இரவு உதயநிதியிடம் 1 மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட உதயநிதி திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேராக ஆழ்வார்பேட்டைக்கு சென்று மு.க.ஸ்டாலினை உதயநிதி சந்தித்தார்.
