ஓய்வூதிய வல்லுநர் குழு அறிக்கையை வழங்க முடியாது- தமிழக அரசு பதிலால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி

Published On:

| By Mathi

Pension Expert Committee Report

ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கையை தர முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மறுப்பதாக ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான வல்லுநர் குழு கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த வல்லுனர் குழு 7 கட்டங்களாக 194 சங்கங்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி 30. 12 .2025 அன்று அன்றைய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களிடம் தனது அறிக்கையை வழங்கியது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாணையை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்த தவெக தனது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை இடைக்கால ஏற்பாடாக இடைக்கால அரசாணை வெளியிட்டுTAPS ஐ நடைமுறைப்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் சட்டமன்றத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான வல்லுநர் குழு அறிக்கையின் படி TAPS திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு கடன் வாங்க அனுமதி வழங்கினால் TAPS நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லை சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்ற ஆசிரியர் தமிழக நிதித்துறையிடம் வல்லுநர் குழு அறிக்கையை வழங்கும்படியும், டில்லியில் உள்ள ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் (PFRDA) தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை விவரம் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டிருந்தார்.

அதற்கு தமிழக நிதித்துறை அளித்துள்ள பதிலில் குழுவின் அறிக்கை மீது பரிசீலனை மற்றும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அறிக்கையை வழங்க இயலாது என்று தெரிவித்து உள்ளனர்.

ADVERTISEMENT

தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) தொடர்பாக இரண்டு அரசாணைகள் வெளியிடப்பட்டு அதை நடைமுறை படுத்திவரும் நிலையில் அது குறித்த வல்லுநர் குழு அறிக்கையை வெளியிடாமல் இருப்பது அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share