தந்தை பெரியார் நடத்திய வார இதழ் ‘குடி அரசு’. 1925-ம் ஆண்டு மே 2-ந் தேதி ஈரோட்டில் ‘குடி அரசு’ முதல் இதழ் வெளியானது. சுயமரியாதை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை, இன விடுதலை, பகுத்தறிவு, சமூக சமத்துவம் உள்ளிட்ட கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பெரியார் ‘குடி அரசு’ இதழை ஆயுதமாக பயன்படுத்தினார்.



அன்றைய சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்த தந்தை பெரியாரின் கருத்துகள் மட்டுமின்றி, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள், உரைகள், தீர்மானங்கள், விவாதங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்த முக்கிய வரலாற்று ஆவணமாகவும் ‘குடி அரசு’ இதழ் விளங்குகிறது. தந்தை பெரியாரின் சிந்தனை வளர்ச்சியையும், தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் உருவாகி வளர்ந்த வரலாற்றையும் அதுனூடாக தமிழ்நாட்டின் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கான முதன்மை ஆதாரங்களில் ஒன்றாக “இந்த “குடி அரசு” இதழ்கள் திகழ்கின்றன.
தந்தை பெரியார் நடத்திய குடி அரசு இதழ்களை, கடந்த திமுகவின் திராவிட மாடல் அரசு இணையத்தில் பதிவேற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது. தற்போது 1925-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரையில் 550-க்கும் மேற்பட்ட ‘குடி அரசு’ இதழ்களின் பிரதிகள் தமிழ்நாடு அரசின் இணைய கல்விக் கழகத்தின் தமிழ் மின் நூலகத்தின் இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
மாதிரி பக்கங்கள்


