தமிழகத்தில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பள்ளி குழந்தைகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பதை தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், பெற்றோர்கள் அரசுக்கு வலியுறுத்தினர்.
அதன்படி பள்ளிகள் திறப்பு தேதி மூன்று நாட்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இன்று (மே 26) வெளியிட்டிருக்கும் அறிப்பில், “2026–2027 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிகள், 4 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு 01.06.2026 அன்றும், 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு 04.06.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும் மற்றும் வெவ்வேறு வகுப்புகளில் குழந்தைகள் படிக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே சீரான தேதியில் பள்ளிகளைத் திறக்கக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.
ஜூன் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்கள் , காற்றில் அதிக ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்பமான சூழல் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளைக் காட்டுகின்றன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாக, பள்ளிகளின் தூய்மைப் பணிகள், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயார்நிலை தொடர்பான ஆயத்தத் தேவைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.
இந்த அனைத்து காரணங்களையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும் 1 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக 04.06.2026, வியாழக்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாக தேவையான ஆயத்த நடவடிக்கைகள் முடிக்கப்படுவதையும், மாணவர்களின் நலம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்ய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
