நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. இதனால் தேநீர் கடைகளில் டீ, காபி விலை மீண்டும் உயருகிறது.
1 கிலோ சர்க்கரை விலை ரூ40, ரூ50 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ65, ரூ75 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு எத்தனால் பெட்ரோல் அறிமுகம் செய்துள்ள நிலையில் எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்துவதால் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இறுக்கம், பதுக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவே தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என்கிறது மத்திய அரசு.
அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உள்நாட்டு இருப்பை மேலும் அதிகரிக்கும் நோக்கில், 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தேநீர் கடைகளில் டீ, காபி விலையும் அதிகரிக்கும் நிலைமை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் டீ, காபி விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. தற்போது சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக மீண்டும் டீ, காபி விலை ரூ20, ரூ25 என உயரக் கூடும் என்கிற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
