இலங்கை யாழ்ப்பாணத்தில் ( Jaffna) கோவில் திருவிழாவில் கண் பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் 385 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் ஆகஸ்ட் 20-ந் தேதி இரவு பெருமளவில் வாண வேடிக்கைகள் மற்றும் அதீத சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கண்களில் பாதிப்பு ஏற்பட்டதாக அடுத்தடுத்து பொதுமக்கள் மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். நேற்று இரவு நிலவரப்படி 385 பேர் யாழ்ப்பாணம் மருத்துவமனைகளில் ‘கண்’ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கண் எரிச்சல் தொடங்கி கண்ணில் சிறு பாதிப்பு தோன்றினாலும் அனைவரும் மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அதீத லேசர் ஒளிக்கீற்றுகளை பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
