தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு இன்றும் (ஆகஸ்ட் 12), நாளையும் (ஆகஸ்ட் 13) சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையால் நாளை (ஆகஸ்ட் 13) முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வர இருக்கிறது. இதனையடுத்து வெளியூர்களில் வந்து சென்னையில் வேலைபார்க்கும் நபர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற விடுமுறை நாட்களிலும், விழாக்காலங்களிலும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.
இதையடுத்து, தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் மக்கள் சுலபமாகப் பயணம் செய்ய முடியும். இந்த நிலையில், விடுமுறை காரணமாக பலர், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட்டை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
விடுமுறையைக் கருத்தில் கொண்ட ஆம்னி பேருந்துகளும், பயணிகளின் அதிகரிப்பாலும் , கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியது.

இது, புகாராக தமிழக அரசின் காதில் விழ, இதற்கென ஒரு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, கூடுதல் விலைக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்குக் கட்டணத் தொகை போக மீதித்தொகை பயணியரிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆய்வுக் குழுவினர் பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக பயணிகள் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மூன்று நாள் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்றும் (ஆகஸ்ட் 12), நாளையும் (ஆகஸ்ட் 13) சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கோயம்பேட்டில் இருந்து 610 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) 425 சிறப்பு பேருந்துகளும் நாளை (ஆகஸ்ட் 13) 185 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதுபோல், விடுமுறை முடிந்து சென்னை திரும்ப போதுமான பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
