கட்டுரை 12. இணையம், தகவல்தொடர்பு முதலீட்டியம், பன்மைத்தன்மை
இந்த மினிதொடரில் – இணையம், சமூக வலைத்தளங்கள், இவற்றின் தொழில்நுட்பங்களின் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. உலகெங்கும் சமீபத்தில் எழுந்துள்ள வலதுசாரிகளின் எழுச்சியில் இணையம் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது என்ற பார்வையில் உண்மைக் குறைபாடு உள்ளது. அடுத்ததாக, இணையத்தின் தன்மைகளே சமமின்மை, அதிகாரக்குவியல், முதலீட்டியப் பெருக்கம் ஆகியவற்றுக்கு துணைபோகின்றன என்பதாகும். ஆக இணையத்தின் தொழில்நுட்பத் தன்மைகளும், அதன் முதலீட்டியமும் ஜனநாயகத்தன்மைக்கு ஆதரவானதல்ல என்கிற அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இணையத்துக்கும் நமக்கும் உள்ள உறவு, தகவல் தொடர்புமுதலீட்டியத்தாலும் (communicative capitalism), அதன் கண்காணிக்கும் தன்மையினாலும், பெரும் சிக்கலாக உருவாகி வருகிறது.
தகவல்தொடர்பு முதலீட்டியமானது இணையத்தை ஒரு வியாபாரப் பண்டமாக்குமே ஒழிய, சமூகப்புரட்சிக்கு வழிசெய்யும் என்று நம்ப இதுவரை எந்த முகாந்தரமும் இல்லை. இணையத்தின் உதவியோடு நாம் அவ்வப்போது காணும் சிறிய மாற்றங்களைக்கண்டு உவப்படையலாம். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு, ஜல்லிக்கட்டு, அரபு வசந்தங்களுக்காக மக்கள் திரண்டது – எல்லாம் அப்படிப்பட்ட எடுத்துக்காட்டுக்கள். இவற்றில் சில நிகழ்வுகள் சற்றே பெரியவை என்பது என்னவோ உண்மைதான். சற்று மகத்தானதும் கூட. ஆனால் அதுவே முழுக்கதையுமல்ல.
எனவே, சமூக வலைத்தளங்களுக்கும் அரசியல் விழிப்புணர்வுக்கும்(அல்லது வலதுசாரி எழுச்சிக்கும்) இடையே நிலவிவருவதாக அறியப்படுகிற “தொடர்பினை” கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அப்படிக் கேள்விக்குள்ளாக்குவதே இணையத்தை மக்களுக்கான ஒரு பண்டமாக மாற்றுவதற்கான முதல் படியாக இருக்கும். தற்சமயம், இது ஒரு முதலீட்டியப் பண்டம் மட்டுமே.
இணையம் புரட்சிக்கு வித்திடும் என்று நம்புகிற சுதந்திரவாதிகள்; இணையத்தின் மூலமாக சாமானிய மக்களின் விரக்திகளை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயல்கிற அரசியல் வலதுசாரிகள் – என்ற இரு குழுக்களும், சமூகவலைத்தளங்கள் என்ற தகவல்தொடர்பு முதலீட்டியத்தை நம்பியே உள்ளனர்.
சென்ற வாரத்தில் நான் குறிப்பிட்டதுபோல இணையம் இராணுவ பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது. எனவே இன்றைய சிவில் இணையத்தில் இராணுவ சிறப்பியல்புகள் நிரம்பிக்கிடக்கிறது. தகவல்தொடர்பு முதலீட்டியமானது இந்த இராணுவ சிறப்பியல்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது மிக முக்கியமானது.
இன்றைய இணையத்தின் ‘கரன்சி’ வலைத்தளங்களில் நீக்கமற நிறைந்திருப்பவை டேட்டா (data) என்றழைக்கப்படும் தரவுகள். இந்தத்தரவுகளுக்கென தனியாக எந்த மதிப்பும் கிடையாது. ஆனால் பயனர்களின் முகம் தரவுகளோடு இணைக்கப்படும்போது இதற்கு மதிப்பு உருவாகிறது. அதாவது தரவுகள் கண்காணிக்கப்படும்போது (இராணுவத்தன்மை) முதலீட்டியத்திற்கு ஏற்ற மதிப்புள்ள பண்டமாக மாறிவிடுகிறது.
இணையத்தின் வியாபார வடிவம் அத்தொழில்நுட்பத்தின் கண்காணிப்புத் தன்மையில் அடங்கியுள்ளது. கண்காணிப்பு இராணுவத்தின் அடிப்படைத்தன்மைகளில் ஒன்று. இணையத்தில் உள்ள அனைத்துவிதமான தொழில்நுட்பவசதியும், வளர்ச்சியும் கண்காணிப்புத்தன்மையின் அடிப்படையில் விளைந்தது என்றால் மிகையாகாது.
போக்குவரத்தை சரிசெய்யும் ஜிபிஎஸ்; ஃபேஸ்புக் நிலைத்தகவல்களில் நீங்கள் இருக்கும் இடத்தைத் தானாகக் காட்டும் உங்கள் ‘ஸ்மார்ட்’ ஃபோன்; நீங்கள் இணையத்தில் செல்லுமிடத்தையெல்லாம் குறிப்பில் வைத்திருக்கும் உங்கள் இணைய உலாவி; உங்களின் இணைய அனுபவத்தை இனிதாக்க நீங்கள் செல்லும் வலைத்தளங்களனைத்தும் உங்கள் கணினியில் விடும் குக்கீஸ் எச்சங்கள்; நீங்கள் எடுக்கும் எலக்ட்ரானிக் படங்களில் உள்ள நிழல் செய்திகள் [exif data viewers](http://www.verexif.com/), உங்கள் ஆதார் அட்டை – இவையனைத்திலும் உள்ள அடிப்படைத்தன்மை “கண்காணிப்பு.”
கண்காணிப்புத் தன்மையின் சிவில் வடிவம் தரவுகளைஉபயோகிக்கும் பயனர்களின் முகங்களைத் தெரிந்துகொண்டு பின்னர் அவர்களிடம் பண்டங்களை விற்பது ஆகும். இதனாலேயே இணையத்தின் முதலீட்டியம் இராணுவசிறப்பியல்புகளின் அடிப்படையில் எழுப்பப்பட்டது எனக் கூறுகிறேன்.
உலகில் உள்ள அனைத்துக் கருத்தாக்கங்களுக்கும் ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாறே, அவ்வரலாற்றின் அரசியலே கருத்தாக்கங்களின் தன்மையையும், மெய்மையையும் தீர்மானிக்கின்றன. ஆக வரலாற்றையும், ஒரு கருத்தாக்கம் கடந்துவந்த அரசியல்களையும் புரிந்துகொள்வதின் மூலம், அக்கருத்தாக்கத்தின் சமூக அரசியல் தன்மைகளையும் அவற்றின் விளைவுகளையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்: நான் கூறவில்லை, திருவாளர் மிஷல் ஃபூக்கோ. எளிமைப்படுத்தி சொல்லியிருக்கிறேன். ஃபூக்கோ சொன்னது இணையம் என்ற கருத்தாக்கத்திற்கு சாலப்பொருந்தும்.
எந்த ஒரு தொழில்நுட்பமும் அது தோன்றிய சூழல், அரசியல், கலாச்சாரம் – ஆகியவற்றின் உற்பத்தியாகவே இருந்துள்ளது. எனவே எல்லாத் தொழில்நுட்பத்திலும் அடிப்படையான சார்பு நிலைகள் (intrinsic bias) ‘இயற்கையானது’. இயந்திரப்புரட்சி, பசுமைப்புரட்சி, – என அனைத்து தொழில்நுட்பப் புரட்சிகளுக்கும் இது பொருந்தும். தொழில்நுட்பம் நடுவுநிலையானது அல்ல (technology is never neutral). அது சாய்வானது; சார்புத்தன்மையுள்ளது. மீண்டும் இணையத்துக்கு வருவோம்.
இணையம் இராணுவத்தின் கருவில் தோன்றியது என்பதால், அதன் கண்காணிப்புத் தன்மையானது இயல்பாகவே அதிகாரக் குவியலை ஏற்படுத்துகிறது. இதற்கு எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்ட அமெரிக்க அரசின் உலகளாவிய ஒற்று வேலையே சான்றாகும். அதைப்போலவே கண்காணிப்புத் தன்மையின் சிவில் வடிவம் தரவுகளாக மாற்றப்பட்டு தகவல் தொடர்பு முதலீட்டியத்திற்கு அடிப்படைப் பொருளாகியுள்ளது என்று பார்த்தோம்.
கடந்த மார்ச் 24-ந் தேதி அமெரிக்க செனட்டில் ஒரு மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. உங்களுக்கு இணையத் தொடர்பு அளிக்கும் நிறுவனம் (உதாரணமாக நம்மூர் பிஎஸ்என்எல் மாதிரி) நீங்கள் எங்கெல்லாம் இணையத்தில் செல்கிறீர்கள், எதை லைக் செய்கிறீர்கள், எந்தப் பக்கத்துக்கு அதிகம் செல்கிறீர்கள், என்ற உங்களின் இணைய வரலாற்றை (பயனர் தரவுகள்) அனைத்தையும் வைத்திருக்கிறது. இந்தத் தரவுகளை மூன்றாவது நபருக்கு விற்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்யவே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எந்த விதமான பெரிய விவாதமும் இல்லாமல், அமெரிக்க செனட் இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றியுள்ளது. 2017 நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்த சட்டத்தின் துணையோடு, அமெரிக்கவாழ் இணையப் பயனர்களின் அனைத்து ஆன்லைன் நடவடிக்கைகளும் வியாபார நிறுவனங்களுக்கு விற்கப்படவுள்ளன. எனவே, கண்காணிப்புத் தன்மை + தரவுகள் = தகவல்தொடர்பு முதலிட்டியம்.
இப்போது இந்தத் தரவுகளை சற்று கூர்ந்து கவனிப்போம்.
ஆண்ட்ரு போல் (Andrew Pole) ஒரு புள்ளிவிவர நிபுணர். இணையத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், புள்ளிவிவரவியலின் துணையோடு, பயனர்களின் அன்றாட இணையப் பழக்கவழக்கங்களைக் கணிக்கும் மென்பொருளை உருவாக்கியவர். இவ்வகையான மென்பொருள், அலசிகள் (analytics) என்று அழைக்கப்படுகின்றன.
அலசிகள், தரவுகளின் இயந்திரத்தன்மையைக் களைந்து அவற்றின் பின் இருக்கும் பயனர்களின் நுகர்வுக்கு முகம் கொடுக்கின்றன. ஆண்ட்ரு போல் அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டான டார்கெட்டில் 2002-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். அங்கு டார்கெட் வலைத்தளத்திற்கு ‘வருகை தரும்’ இணையப் பயனர்களின் நடத்தையை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான பொருள்களை இமெயில் மூலமாகவோ, கூப்பன் மூலமாகவோ அறிமுகம் செய்யும் மென்பொருளை உருவாக்கினார். ஆண்ட்ரு போல் பலரும் இதை உருவாக்கியுள்ளனர். ஆனாலும் ஆண்ட்ரு பற்றிக் குறிப்பிட்டுக் கூறுவதற்கு காரணம் அடுத்த பத்தியில் உள்ளது. நீங்கள் ஃபேஸ்புக்கில் உலாவும் போது, நேற்று அமேஸானில் வாங்கிய புத்தகமோ அல்லது முந்தாநாள் இரவு இணையத்தில் ஜொள்ளு விட்ட நடிகை குறித்த செய்தியோ, உலாவியின் ஓரமாகத் தெரிவது இதனால்தான். இப்படியாக உங்களைக் கண்காணிக்கும் இந்த மென்பொருளின் பெயர் ப்ரிடிக்டிவ் அனலிட்டிக்ஸ் (கணிக்கும் அலசி – predictive analytics) நிற்க.
ஆண்ட்ரு உருவாக்கிய கணிக்கும் அலசியின் விளைவைப் பார்ப்போம்: உண்மையில் இந்த விளைவு மின்னியாபொலிஸில் உள்ள ஒரு தந்தைக்கு ஏற்பட்டது. உயர் பள்ளியில் படிக்கும் தனது மகளுக்கு டார்கெட் மார்க்கெட்டிங் அனுப்பிய மின்னஞ்சலில் குழந்தைத் தொட்டில், பிறந்த குழந்தைக்கான உடுப்பு வாங்க கூப்பன் அனுப்பியிருந்தது. எல்லாத் தந்தையரைப் போல அவர் மிகுந்த கோபமடைந்திருந்தார். தனது மகள் உடலுறவில் ஈடுபட்டு தாயாக வேண்டுமெனெ டார்கெட் சொல்கிறதா? என கோபப்பட்டார். டார்கெட் மேனேஜர் அநேக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு இது குறித்து விசாரிப்பதாகக் கூறினார். சிலநாள் கழித்து கடையின் மேனேஜர் மீண்டும் ஃபோன் செய்து மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்த போது தந்தை இடைமறித்தார். “மன்னிக்கவும், நான் தான் தவறு செய்துவிட்டேன். எனது வீட்டில் நடக்கும் சில விசயங்கள் எனக்குத் தெரிய சில நாள் பிடித்தன. எனது மகள் கருவுற்றிருக்கிறாள்.” என்று தந்தை சொன்னார்.
கருவுற்றிருக்கும் இளம்பெண் டார்கெட் இணையத்தளத்தை சுற்றி வந்து வேடிக்கை பார்த்த பொருளின் தன்மைகளைக் கண்காணித்து, அவர் கருவுற்றிருக்க வாய்ப்புள்ளது என்பதை ஆண்ட்ரு போலின் அலசி கணித்து விட்டது. அது மட்டுமல்லாமல், அந்த இளம்பெண்ணுக்கு தேவையான பொருள்களை விற்க கடைவிரித்து விட்டது.
இவற்றை டார்கெட் போன்ற சூப்பர் மார்க்கெட் மட்டும் செய்வதில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவையும் செய்கின்றன.
அது பற்றி மேலும் எழுதும் முன்னர் உங்களுக்கு சில கேள்விகள்: உங்களது ஃபேஸ்புக்கின் நண்பர்கள் பட்டியலில் உங்களின் அரசியலுக்கு எதிரான கொள்கைகளை உடையவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? அப்படி இருந்தால் அவர்களுடன் எதிர்விவாதம் அடிக்கடி செய்வதுண்டா? அல்லது அப்படிப்பட்டவர் உங்கள் குடும்பத்தினர் / உறவினர் என்ற காரணத்தினால் விட்டு ‘அமைதியாக’ சகித்துக் கொள்கிறீர்களா?
உங்களின் பதில் எனக்குத் தெரிய வேண்டாம். ஆனால் நம் நடத்தை பற்றி சமூக வலைத்தளங்களங்களான ஃபேஸ்புக், ட்விட்டருக்கும் தெரியும்: நாம் அனைவரும் ஒரு செம்மறி ஆட்டுக்கூட்டம் போல. நாம் ஒத்த கருத்துள்ள ஆட்களிடம் மட்டுமே பழகுவோம், ‘விவாதிப்போம்’, அல்லது ‘வேறுபடுவோம்.’ எதிர்த்தரப்பு ஆட்களிடம் பகிர்வது என்பது மிகவும் குறைவு. இணையத்தில் உரையாடல்கள் பெரும்பாலும் ஒத்த அரசியல் நிறத்தின் அடிப்படையிலேயே நடக்கின்றன. அதனால் தான், கருத்து வேறுபாட்டினால் ‘நட்பு நீக்கம்’, ‘ஆள் தடை’ எல்லாம் ஏற்படுகிறது அல்லது கருத்து இருட்டடிப்பு நடக்கிறது (அவனுக்கு லைக் கிடையாது; அவன் ‘எதிராளியின் தகவலுக்கு’ லைக் மட்டுமல்ல, ஷேரும் உண்டு). சுருக்கமாக இணையத்தில் உண்மையான பன்மைத்தன்மை (pluralism) என்பது அரிதான பண்டம்.
சமூகவலைத் தள, இணையக ஊடகப் பண்டிதர்கள் இவற்றை ‘confirmation bias’ (கன்ஃபர்மேஷன் பயஸ்) என்று சொல்கிறார்கள். இது ஒரு உளவியல் பதம்: அதாவது நமது வர்க்க, பாலின, நிற, இன, மத, சாதி, கலாச்சார அரசியலுக்கு ஒத்த மனங்களோடு மட்டுமே பேச விரும்பும் ஒரு விதமான நாட்ட நிலை அல்லது ‘நாட்டநிலைச் சாய்வு’ (confirmation bias). இணையத்தின் நடுவுநிலையெல்லாம் இந்த நாட்டநிலைச் சாய்வின் ஊடாகவே இயங்குகிறது.
சமூகவலைத்தளங்கள் மென்பொருள்களின் மூலம் நாட்டநிலை சாய்வினை ஒரு பண்டமாகவே உற்பத்தி செய்கின்றன. இதன் விளைவாகவே, நீங்கள் ஒரு சோஷலிச விரும்பி எனில் உங்கள் இணையப் பக்கங்களில் நாஜிக்களின் கட்சி குறித்து விளம்பரப்பட்டி வருவது மிக மிக அரிது. தலித்துகளின் அரசியல் உரிமை பற்றி பேசுபவரின் பக்கத்தில் இந்துத்துவ கலாச்சாரம் போற்றும் மீம்ஸ் தெரிவது அரிது. அதே போல் யூ ட்யூபில் உங்களுக்கு ரெக்கமெண்ட் செய்யப்படும் படங்கள் எல்லாம் உங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் இருந்து பெறப்படுவது ஆகும். திருட்டுத்தனமாக போர்ன் பார்த்தது குக்கியின் எச்சங்களின் மூலமும், உலாவியின் மூலமாகவும் அலசிக்குச் சென்று பின்னர் அதுவே உங்களுக்கு மின் அஞ்சலாகவும் வந்து, அல்லது சில சமயம் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்பட்டியில் தோன்றியும் உங்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
ஃபேஸ்புக் இந்த கணிக்கும் அலசியை, மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. நம் ஒவ்வொருவரின் லைக், ஷேர்; நம் நட்புப்பட்டியலின் வருகின்ற செய்திகள், அவர்களின் லைக், ஷேர் – அதற்கு எனது/உங்களின் பதில் லைக், திரியில் நடைபெறும் உரையாடல்; நிலைத்தகவல் – அதில் வருகின்ற முக்கிய வார்த்தைகள், ஹாஷ்டேக்குகள் (#) உதாரணம்: ஜல்லிக்கட்டு, ஃபாசிசம், தயிர்சாதம், தாராளவாதம்; செல்ஃபி, இணைய இணைப்புகள், புகைப்படங்கள், மீம், மொக்கை – என அனைத்தையும் ஃபேஸ்புக் கண்காணிக்கிறது. புரட்சி லட்சியத்தோடு நீங்கள் உருவாக்குகின்ற ஒவ்வொரு ஹாஷ்டேக்கும் தரவுகளை அலசிகளாக மாற்றி தகவல் தொடர்பு முதலீட்டியத்திற்கு வலு சேர்க்கிறது. அதில் உள்ள தரவுகளையெல்லாம் அலசிகளால் கணித்து, அதில் வரும் முடிவுகளைக் கொண்டு உங்கள் பக்கத்தில் எந்த விதமான செய்திகள், விளம்பரங்கள், பேசக் காத்திருப்போரின் தர வரிசை, ‘உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள்’ வரிசை, ஷாப்பிங் ஆலோசனை, உடல்நலக் குறிப்பு வரவேண்டும் என்பதை ஃபேஸ்புக் (அல்லது ஏதோ ஒரு இணையத்தளம்) உங்களுக்காக முடிவெடுக்கிறது. இது மட்டுமல்ல, உங்களின் விருப்பு பட்டியல் மற்ற வியாபார நிறுவனத்தினரிடம் பகிரப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல், ப்ரெக்ஸிட்டுக்கு எல்லாம் முன்னதாக ஆகஸ்ட் மாதம் 2013-ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒரு [செய்திக்குறிப்பு வெளியிட்டது](https://www.facebook.com/business/news/News-Feed-FYI-A-Window-Into-News-Feed): அது பயனர்களின் ஃபேஸ்புக் உபயோகிக்கும் அனுபவத்தினை சிறப்புறச் செய்யும் எனக் கூறியது. “எல்லோருக்கும் அனைத்து செய்திகளையும் படிக்க நேரமிருப்பதில்லை. அதே சமயத்தில் அவர்களுக்கு முக்கியமான, விருப்பமான, தேவையான செய்திகளை அவர்கள் தவறவிடவும் விரும்புவதில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க – அதாவது பயனர்களின் பிரச்சினையைத் தீர்க்க – ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் உருவாக்கப்பட்டது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்பட்டன.
முதலாவது ஃபில்டர் பப்பிள் (filter bubble): ஃபேஸ்புக்கில் நீங்கள் கேட்க, பார்க்க, உரையாட, விவாதிக்க, சண்டைபோட, சிரிக்க விரும்பும் பொருள்களையும், செய்திகளையும் உங்களுக்கு தரவரிசைப்படுத்தித் தருகிறது. வேறு செய்திகளை உள்ளே விடுவதில்லை. உங்களைச் சுற்றி – அதாவது உங்களது இணையம் / ஃபேஸ்புக் பக்கத்தில் – ஒரு செய்திக்கூண்டு (filter bubble) எழுப்பப்படுகிறது.
இந்த செய்திக்கூண்டினில் எந்ந்த செய்திகள் நுழையலாம் என்பதை அலசிகள் (analytics) முடிவெடுக்கின்றன. எனவே நீங்கள் ட்ரம்ப், ஹிலரி, அல்லது மோடி குறித்த ஒரு பொய் செய்தியைப் படிப்பீர்களேயானால், அது அலசியினால் உங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அலசியின் கணிப்பின் படி நீங்கள் ஏற்கனவே அந்த பொய் செய்தியை நுகரும் (விரும்பும்?) ஒரு பயனராக இருக்கலாம். எனவே அந்த செய்தி உங்களின் எண்ணங்களை உறுதிப்படுத்தலாமே ஒழிய உங்களின் கருத்துக்களை கேள்விக்கு உள்ளாக்குவது மிக அரிதே.
ஏனெனில் சமூகவலைத் தளங்களில் உரையாடல்களும் விவாதங்களும் எதிரொலி அறையில் (echo chamber) இருந்து தனியாளாக பேசித்தீர்ப்பது போன்றது. இணையம் வழியாக நாம் பகிரும் தகவல்கள், நமக்கு விருப்புள்ள மற்ற தகவல்களை நுகர்வது (அல்லது குழுவாக ஒரு கருத்தை நிராகரிப்பதும்), பின்னர் ஒத்த மனங்களுடன் உரையாடி பரவசம் அடைவது : இவையெல்லாம் பன்மைத்தன்மையின் அடையாளங்கள் அல்ல. தனது சத்தங்களையே பிரதிபலிக்கும் ஒரு எதிரொலி அறைக்கு(echo chamber) சமமானது.
இதனால் ஏற்படுகின்ற முக்கியமான உளவியல் ரீதியான பக்க விளைவு – சுயமோகம். தகவல்தொடர்பு முதலீட்டியப் பெருக்கத்தில், சுயமோகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது பயனர்கள் அனைவரையும் பண்டமாக மாற்றுவதால், இன்றைய வளரும் சமுதாயத்தினரிடம் அரசியல் அக்கறையின்மை(political apathy) (மேற்குலகிற்கு இது மிக்கப் பொருந்தும்) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இதன் விளைவே தொலைக்காட்சிப் போட்டிக்கு காசு கொடுத்து வாக்களிக்கும் இளைஞர் சமுதாயத்தில் பத்தில் ஒருவர் கூட நாட்டின் வாக்குச் சாவடிக்கு செல்வதில்லை. ஆனால் அதுபற்றி இங்கு விரிவாக எழுத இடமில்லை.
இவ்வளவு கசப்பாகப் பேசுவதால் இணையத்தினையும் அதன் பயன்களையும் நான் முற்றிலும் நிராகரிப்பதாக பொருளல்ல. ஆனால் அவற்றில் நீக்கமற நிறைந்திருக்கும் அரசியல் பொருளாதார, முதலீயட்டியத் தன்மைகளை கண்டும் காணாதது போல இருப்பது சரியல்ல, கேடு விளைவிக்கும்.
மீண்டும் எதிரொலி அறைக்குச் செல்வோம். என்னைக் கண்காணித்து, எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அலசிகளின் மூலம் முடிவெடுத்து – பின்னர் அதனடிப்படையில் எனது பக்கங்களில் என்ன செய்திகள் ஒளிர வேண்டும் என்பதை முடிவெடுக்கும் இணையம் பன்முகத்தன்மை கொண்டதா? இல்லவே இல்லை.
ப்ரெக்ஸிட்டில் ஐரோப்பா வேண்டாம் என்று வாக்களித்தோர் 52 சதவீதம். ஆனால் ப்ரெக்ஸிட் வேண்டாம், ஐரோப்பாவுடன் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வாக்களித்த பிரிட்டனின் மக்கள் இணைய ஆர்வலர் [டிம் ஸ்டெய்ன்பெர்க்](https://www.facebook.com/tom.steinberg.503/posts/10157028566365237?pnref=story), ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் என்ன மாதிரியான விவாதம் நடக்கிறது என அறிய விரும்பினார். ஆனால் ஃபேஸ்புக்கின் செய்திக்கூண்டானது, ப்ரெக்ஸிட் ஆதரவு செய்திகள் எதையும் அவர் ‘பக்கத்தில்’ வரவிடவில்லை. ஃபேஸ்புக்கில் நுழைந்து தேடிய போதும் ப்ரெக்ஸிட் ஆதரவு செய்திகள் அவருக்குக் கிடைக்கவில்லை. செய்திக்கூண்டு அவ்வளவு இறுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. இணையத்தின் பன்முகத்தன்மை இவ்வளவே.
தமிழில் ஃபேஸ்புக்கில் எழுதுபவர்களின் நிலை இவ்வளவு மோசமில்லை – ஏனெனில் அலசிகளின் கணிக்கும் திறன் ஆங்கில மொழியில் வெகுதூரம் சென்று விட்டன. தமிழில் இப்போதுதான் துவங்கியிருக்கிறது. வெகுவிரைவில் தமிழ் அலசிகளும் ஆங்கிலத்துக்கு இணையாக வளர்ந்துவிடும்.
எனவே, பொய் செய்திகள் பற்றி அங்கலாய்க்கும் சுதந்திரவாதிகளும், இணைய சோஷலிஸ்டுகளும், சிலிக்கான் புரட்சியாளர்களும் இணையத்தின் தன்மைகள் குறித்து கொண்டுள்ள புரட்சிகர பார்வைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.
இன்றைய இணையத்தின் மிக முக்கியத் முதலீட்டியத் தன்மைகளாக நான் கருதுவது இரண்டு கூறுகள்: முதலாவது மையப்படுத்தப்பட்ட இணையம் – the centralised Internet (போன வாரத்தில் நான் கூறிய கோபுரத்தன்மையுள்ள அதிகாரப்படி நிலை). இதன் விளைவாக உலகம் முழுமைக்கும் ஒரு(ரே) இணையம்(தான்) என்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது.
உலகின் இன்றைய இணையத்தின் மொழி ஆங்கிலம். உலகில் உள்ள மொத்த வலைத்தளங்களில் [52 சதவீத தளங்கள் ஆங்கிலத்தில் உள்ளன](https://internethealthreport.org/v01/digital-inclusion), ஆனால் 25 சதவீத மக்களே ஆங்கிலம் பேசுகின்றனர் . அதாவது இணையத்தை உடைக்கக்கூடாது, என்ற வாதம் ஆங்கில, லத்தீன் மொழி பேசுவோர்களாலும்; சிரில்லிக் மொழிவடிவம் உபயோகிப்போர்களாலும் முன்வைக்கப்படுகிறது. இந்த ஆங்கில இணையத்தின் அரசியல், பொருளாதார, தொழில்நுட்ப அதிகாரங்கள் மேற்கிலேயே இருக்கிறது. இதற்கு வலுவான முதலீட்டிய பொருளாதாரக் காரணங்கள் உள்ளன. ஆனால் இக்காரணங்களும் மேற்கில் உள்ள ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டுமே வலுப்படுத்துகின்றன.
இணையம் பரவலாக்கப்படவேண்டும் (decentralised) என்ற கொள்கை ஆங்காங்கே பேசப்படுகிறது. இதன் சாதக பாதகம் பற்றி அனைவருக்கும் முழுமையாகத் தெரியாது. ஆனால் இந்த விவாதங்கள் முழுமையாகக் கேட்கப்பட வேண்டும். இந்தக் குரல்கள் நசுக்கப்பட்டால் சந்தேகமே வளரும். அமெரிக்க அரசாங்கத்தின் பிடியிலும், கண்காணிப்பிற்குக் கீழேயும் தான் இன்றைய உலக இணையம் இருந்து வருகிறது என்பதை நாம் எட்வர்ட் ஸ்நோடனின் தயவால் தெரிந்து கொண்டோம்.
இரண்டாவது தன்மை தரவுகளில் முதலீட்டியத்தின் பங்கு. இணையத்தின் அடிப்படைத்தன்மைகளில் இருந்து முதலீயட்டியம் விலக்கப்படவேண்டும் என்பதே. இதன் மூலம் இணையத்தில் கண்காணிப்புத்தன்மை கணிசமாகக் குறைக்கப்படும். அதற்கு இணையம் சிறிது பொதுநலத் தன்மையுடன் (the Internet as public interest) வளர அரசு, பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள் ஆதரவளிக்க வேண்டும்.
மையப்படுத்தப்பட்ட இணையமும், தரவுகளோடு இணைக்கப்பட்ட முதலீட்டியமும் இன்றைய இணையத் தன்மைகளின் இருகண்கள். இணையத்தின் அடுத்த வளர்ச்சிக்கட்டத்துக்குப் போகும் முன் இது குறித்த விவாதங்கள் எழுவது மிக அவசரமும் தேவையுமாகும். மற்றொரு உலகை கற்பனை செய்து பார்க்க முயலும் மனித மனம் மற்றொரு இணையத்தை கற்பனை செய்வதில் ஒன்றும் சிரமம் இருக்காது.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
கட்டுரை 1 – அதிர்ச்சி வெற்றியும் சாமானியர்களும் – முரளி சண்முகவேலன்
கட்டுரை 2 – டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தவர்கள் யார்? – முரளி ஷண்முகவேலன்
கட்டுரை 3 – ஹிலரி கிளிண்டனுடைய ஆதரவாளர்களும் அமெரிக்க இடதுசாரிகளின் வீழ்ச்சியும்
கட்டுரை 4: ஊடகங்களின் அரசியல் சரித்தன்மையும் கருத்துக் கணிப்பு அரசியலும்
கட்டுரை 5. மெய்யறு அரசியல் (POST-TRUTH POLITICS)
கட்டுரை 6 : மெய்யறு சமுதாயம் – ஒளிரும் இந்தியா
கட்டுரை 7: பொய்ச் செய்தி + தகவல் பேதி = வலதுசாரிகளின் எழுச்சி?
கட்டுரை 8: நிபுணர்களின் கல்லறைகளின் மீது பொய் செய்திகள் என்னும் சிலுவை
கட்டுரை 9: பொய் செய்திகளின் மூலம்