நாட்டை உலுக்கிய பாலியல் வழக்கு: பாஜக மாஜி எம்.பி. விடுதலை- நடந்தது என்ன?

Published On:

| By Mathi

Sexual Harassment Row: Delhi Court Acquits BJP Brij Bhushan Singh

நாட்டையே உலுக்கிய மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் தொல்லை வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட விசாரணை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் தமது பதவிக் காலத்தில் தங்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளை பிரிஜ் பூஷண் சரண் சிங் திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

ADVERTISEMENT

2023-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் மாதக்கணக்கில் தொடர் போராட்டம் நடத்தி, பிரிஜ் பூஷண் சரண் சிங்கைக் கைது செய்யவும், கூட்டமைப்பில் இருந்து அவரை நீக்கவும் வலியுறுத்தினர்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி அமைதிப் பேரணி செல்ல முயன்ற விளையாட்டு வீரர்களை டெல்லி போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்த சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ADVERTISEMENT

அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, குழு அமைக்கப்பட்டு போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்காக மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜான் மற்றும் பிரிஜ் பூஷணுக்காக ராஜீவ் மோகன் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, வினேஷ் போகத் ஆரம்பத்தில் தமது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவில், புகார் அளித்த 6 வீராங்கனைகளில் தாமும் ஒருவர் என பகிரங்கப்படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் இன்று ஆகஸ்ட் 3- ந் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிஜ் பூஷண் சரண் சிங், “என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்கத் தயார் என்று முதல் நாளிலேயே கூறியிருந்தேன். இன்று நான் விடுவிக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் (Brij Bhushan Singh) வழக்கு- என்ன நடந்தது?

ஜனவரி 2023: வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஜந்தர் மந்தரில் முதன்முதலில் போராட்டத்தைத் தொடங்கினர். அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டு போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

ஏப்ரல் 2023: மத்திய அரசின் குழுவின் அறிக்கையில் திருப்தியடையாத வீராங்கனைகள், டெல்லி கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தையும் அணுகினர்.

ஏப்ரல் 28, 2023: டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி 2 எஃப்.ஐ.ஆர்களைப் பதிவு செய்தது. ஒன்று, 6 பெண் வீராங்கனைகளின் புகாரின் பேரில் பாலியல் தொல்லை பிரிவுகளின் கீழும்; மற்றொன்று, ஒரு சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டது.

மே 28, 2023: புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு, தங்களின் பதக்கங்களைக் கங்கையில் வீச ஹரித்வார் சென்றவர்களை விவசாய சங்கத் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தடுத்து நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஜூன் 15, 2023: டெல்லி காவல்துறை வீராங்கனைகளின் வழக்கில் குற்றப்பத்திரிகையையும், சிறுமி தொடர்பான போக்ஸோ வழக்கில் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையையும் தாக்கல் செய்தது.

ஜூலை 2023 – மே 2024: நீதிமன்றம் குற்றப்பத்திரிகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விசாரணையைத் தொடங்கியது. மே 2024-இல் பிரிஜ் பூஷண் மற்றும் கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

மே 2025: போக்ஸோ வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை டெல்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மே 2026 – ஜூலை 2026: வழக்கின் விசாரணையில் அரசுத் தரப்பில் 32 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். மே 2026-இல் சாட்சியங்கள் நிறைவடைந்து, ஜூன் மாதம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஜூலை 2, 2026 அன்று இறுதி வாதங்கள் நிறைவடைந்தன.

ஆகஸ்ட் 3, 2026: 6 பெண் வீராங்கனைகள் தொடர்ந்த பாலியல் தொல்லை வழக்கில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை டெல்லி ரோஸ் அவென்யூ மாவட்ட விசாரணை நீதிமன்றம் முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் கூடுதல் முதன்மை பெருநகர குற்றவியல் நடுவர் அஸ்வினி பன்வார், பிரிஜ் பூஷண் சரண் சிங்கை விடுதலை செய்தார். பிரிஜ் பூஷண் சரண் சிங்கோடு சேர்த்து, இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share