செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்

Published On:

| By christopher

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.  

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு குடியரசுத்தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என்றும், அங்கு சோழர்கள் கால மாதிரி செங்கோல் வைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனையடுத்து பலரும் செங்கோல் குறித்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்படவுள்ள செங்கோல் குறித்த விளக்க கூட்டம் இன்று (மே 25) நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டனர்

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,

“டெல்லியில் வரும் 28 ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியிடம் இருந்து சுதந்திரம் பெற்றதை குறிக்கும் வகையில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து நேருவிற்கு செங்கோல் வழங்கப்பட்டது.

இந்த செங்கோலை புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே உயர்ந்த இடத்தில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள், மதுரை, அவிநாசி, பழனி, தூத்துக்குடி உள்ளிட்ட 20 ஆதீனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

செங்கோலை தயாரித்த உம்மிடி சகோதரர்களை பிரதமர் மோடி கவுரவிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவதன் மூலம் தமிழுக்கும் தமிழருக்கும் பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார்.

நாடு சுதந்திரம் பெற்றதை செங்கோல் பரிமாற்றம் குறிக்கிறது. ஆட்சி பரிமாற்றத்தை குறிக்க செங்கோல் பரிமாற்றம் செய்யும் நிகழ்வு இன்னும் பல நாடுகளில் அமலில் உள்ளது.

செங்கோல் சைவ சமயம் சார்ந்தது அல்ல. செங்கோல் குறித்த குறிப்புகள் திருக்குறளில் உள்ளன. அடுத்த 100 ஆண்டுகளுக்கு செங்கோல் நாட்டின் சின்னமாக இருக்க போகிறது.

மக்களவை சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு முறையான அழைப்பு விடுத்தார். எனவே நாடாளுமன்றம் என்ற ஜனநாயக கோயிலின் திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஜனாதிபதி முர்முவை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அவர்தான் திறக்க வேண்டும் என கோருகிறார்கள். மக்களுக்காவாவது நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும்.

செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை” என  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஆவினுக்கு போட்டியாக அமுல்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

’ஜப்பான் மேட் இன் இந்தியா’: படக்குழு வெளியிட்ட அறிமுக வீடியோ!

sengol in not a new one in india
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share