பீகார் முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று (ஏப்ரல் 15) பதவியேற்றுக்கொண்டார்.
பீகாரில் நேற்று மாலை சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்து, அண்மையில் மாநிலங்களவை உறுப்பினரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் தற்போதைய முதல்வருமான நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சராக இருந்த சாம்ராட் சவுத்ரி சட்டசபை குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பீகார் ஆளுநர் சையத் அதான் ஹஸ்னைனிடம் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரிய சாம்ராட் சவுத்ரி, இன்று பீகார் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் ஆளுநர் சையத் அதான் ஹஸ்னைன் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த இருவர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிஜேந்திர பிரசாத் யாதவ் மற்றும் விஜய் குமார் சவுத்ரி ஆகியோருக்கு ஆளுநர் சையத் அதான் ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
20 ஆண்டுகளாக பீகாரின் முதலமைச்சராக இருந்த நிதீஷ் குமாருக்குப் பின்னர், அம்மாநில முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுள்ளார். பீகார் மாநில அரசியல் வரலாற்றில் பாஜகவின் முதல் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
