ஓபன்ஏஐ சாகா நிறுவனத்தில் பெரும் திருப்பமாக நீக்கப்பட்ட 5 நாட்களுக்குள் சாம் ஆல்ட்மேன் அதே சிஇஓ பொறுப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் பலமணி நேரமாக செய்யும் வேலைகளை, சில நிமிடங்களில் செய்து முடிக்கும் வகையில் உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி(Chat GPT) ஏஐ கண்டுபிடிப்பின் உச்சமாக கருதப்படுகிறது. தேடலின் மையத்தை உள்ளீடாக பெற்று, தேவைப்படும் தகவலை ஆய்வறிக்கையாக தெளிவாக பயனருக்கு வெளியிடுவது சாட் ஜிபிடி ஏஐ-யின் சிறப்பு.

இதனை உருவாக்கிய அமெரிக்காவில் உள்ள ஓபன்ஏஐ(OpenAI) நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சியில் உலகளவில் முன்னணியில் உள்ளது. அதற்கு அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனும், தலைவர் கிரெக் ப்ரோக்மேனும் முக்கிய காரணம்.
சாம் ஆல்ட்மேன் நீக்கத்தால் அதிர்ச்சி!
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு விரைவாக உருவாக்குவது மற்றும் எப்படி அதனை பணமாக்குவது என்பது குறித்த கருத்து வேறுபாடு காரணமாக சாம் ஆல்ட்மேனை சிஇஓ பொறுப்பிலிருந்து கடந்த 17ஆம் தேதி ஓபன்ஏஐ நிறுவனம் நீக்கியது.
வெற்றிகரமாக இயங்கி வரும் உலகின் முன்னணி நிறுவனத்தில் இருந்து சாம் ஆல்ட்மேன் நீக்கப்பட்டது ஏஐ துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர் நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் நிறுவனத்தின் தலைவர் பதவியை வகித்து வந்த கிரெக் ப்ரோக்மேனும் விலகினார்.
மேலும் சாம் ஆல்ட்மேனுக்கு பதிலாக ஓபன் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மீரா முர்த்தி இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, பணி நீக்கம் செய்யப்பட்ட சாம் ஆல்ட்மேனை தங்களது ஏஐ குழுவில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விரைவில் இணைய உள்ளார் என்று செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மீண்டும் இணைந்த ஆல்ட்மேன்
இந்த நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பினை தான் மீண்டும் ஏற்றுள்ளதாக சாம் ஆல்ட்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், “நான் ஓபன் ஏஐ நேசிக்கிறேன். கடந்த சில நாட்களாக நான் செய்த பணிகள் அணியை ஒன்றாக வைத்திருக்க உதவியது. ஓபன் ஏஐ தான் எனக்கு சிறந்தது. நான் ஓபன் ஏஐயில் திரும்புவதற்கு காத்திருக்கிறேன். மைக்ரோசாஃப்ட் உடனான எங்கள் வலுவான கூட்டணியை உருவாக்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/OpenAI/status/1727210837868437901
இதனை ஓபன் ஏஐ நிறுவனமும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதன் எக்ஸ் பக்கத்தில், “ப்ரெட் டெய்லர் (தலைவர்), லாரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகியோரின் புதிய ஆரம்பக் குழுவுடன் சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐக்கு தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்புவதற்கு கொள்கையளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் சாம் ஆல்ட்மேனின் ட்வீட்டுக்கு இதய எமோஜியையும் பதிவிட்டு வரவேற்றுள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.
கிறிஸ்டோபர் ஜெமா
”அன்னூருக்கு ஒரு நியாயம்? செய்யாறுக்கு ஒரு நியாயமா?”: அன்புமணி கேள்வி!
