நம் நாட்டின் நாணயத்தில் ஒரு பெரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பரிசீலித்து வருகிறது. பாரம்பரிய காகித நோட்டுகளுக்குப் பதிலாக பாலிமர் (பிளாஸ்டிக்) நோட்டுகளை (Plastic Currency) அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் இன்னும் அதன் முதற்கட்ட நிலையில் உள்ளது.
நம் நாட்டில் பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிடும் யோசனையை ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்பே முதன்முதலில் முன்வைத்தது. இந்தத் திட்டத்தை இப்போது மீண்டும் தொடங்குவதற்கான முக்கிய காரணம், பணப் புழக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ஆகும்.
பணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால் காகித நாணயங்களை அச்சிடுவதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காகித நாணயங்கள் விரைவில் அழுக்காகின்றன. மற்றும் கிழிகின்றன அல்லது தரம் குறைகின்றன. இதன் விளைவாக, ஆண்டுதோறும் அதிக அளவிலான நாணயங்கள் வீணாகின்றன. இது அரசாங்கத்தின் மீதான நிதிச் சுமையை அதிகரிக்கிறது.
முன்னதாக, 2014 பிப்ரவரியில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நகரங்களில் கள சோதனைகளுக்காக 10 ரூபாய் மதிப்பிலான 100 கோடி பிளாஸ்டிக் நோட்டுகள் வெளியிடப்படும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தது. நாட்டின் புவியியல் மற்றும் காலநிலை பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டும், வெவ்வேறு காலநிலைகளில் இந்த நோட்டுகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்காகவும் இந்த நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாகப் பின்னர் நிறுத்தப்பட்டது. இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்தச் சவால்களை எதிர்கொண்டு, அதை மீண்டும் செயல்படுத்தத் தயாராகி வருகிறது.
