ADVERTISEMENT

ராணிப்பேட்டை திமுகவில் ‘திக்.. திக்..’.. வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வாரா? என்ன நடக்கிறது?

Published On:

| By Mathi

Ranipet DMK

ராணிப்பேட்டை (Ranipet) சட்டசபை தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவிக்கப்பட்டாலும் ‘வேட்பு மனுவ’ அவர் தாக்கல் செய்வாரா? புதிய வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? என்கிற குழப்பம் திமுகவில் உருவாகி உள்ளது.

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக வினோத் காந்தி அறிவிக்கப்பட்டதில் இருந்தே உள்ளூர் திமுகவில் சலசலப்பு தலைதூக்கியது. திமுக நிர்வாகிகளுடன் அனுசரணையாக நடந்து கொள்ளாதவர் வினோத் என்கிற புகார்கள் ஊடகங்களிலும் வெளியாகின.

ADVERTISEMENT

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக வேட்பாளர்கள் பலரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர். சில வேட்பாளர்கள் இன்னமும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். இவர்களில் வினோத் காந்தியும் ஒருவர்.

இது பற்றி நாம் ராணிப்பேட்டை திமுகவினரிடம் விசாரித்த போது, “வினோத் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் இன்னும் அவருக்கு ‘முறையான’ சிக்னலை கட்சித் தலைமை கொடுக்கவில்லை.. அதனால் வேட்பு மனுத் தாக்கல் மட்டுமல்ல தேர்தல் பணிகளையும் தொடங்காமல் இருக்கிறார் வினோத் காந்தி.. இதற்கு காரணம் வேறு யாரும் அல்ல.. வினோத்தின் அப்பா அமைச்சர் காந்திதான்” என்கின்றனர்.

ADVERTISEMENT

அப்படி என்ன பிரச்சனை? என அமைச்சர் காந்தியின் ஆதரவாளர்களிடம் கேட்ட போது, “தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவே வினோத் கொடுக்கவில்லை.. ஆனால் அமைச்சர் காந்தியின் மகன் என்பதற்காகவே வினோத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலினை அமைச்சர் காந்தி சந்தித்து பேசினார். அப்போது , “நான் என்ன தப்பு செஞ்சேன்? எனக்கு ஏன் சீட் கொடுக்கலை.. என் மகன்னு நினைச்சு வினோத்துக்கு சீட் கொடுத்திருக்கீங்க.. அவ என் மகனே இல்லைங்க.. எங்களுக்கும் அவனுக்கும் எந்த பேச்சுவார்த்தையுமே 4,5 வருஷமா இல்லை.. என்னோட, அவங்க அம்மாவோட தொடர்ந்து சண்டை போட்டுகிட்டே இருக்கிறவன்.. அவன் எங்களை விட்டு போய் தனியாகத்தான் இருக்கிறேன்.. எங்களுக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை.. இந்த மாவட்டத்துல இருக்கிற 4 தொகுதிகளையும் நான் ’நல்லா’தான் வெச்சிருக்கேன்.. எனக்கு சீட் கொடுக்காம அவனுக்கு போய் கொடுத்திருக்கீங்களே” என தனக்கே ”உரிய பாணியில்” முதல்வர் ஸ்டாலினிடம் தாம் பேசியதாக அமைச்சர் காந்தி எங்களிடம் சொன்னார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம்னு அறிவிப்பு வரும்னு நாங்க மட்டும் இல்லை.. வினோத்தும் கூட வெயிட் பண்றாரு.. அதனாலதான் அவர் இன்னமும் நாமிஷேன் கூட தாக்கல் செய்யலை” என்கின்றனர். இதனால் ராணிப்பேட்டை திமுகனர், கட்சி தலைமையில் இருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வரும் என ரொம்பவே எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share