கோவை கொடீசியாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
அப்போது, “கோவையும் என்னுடைய ஊர் தான் என்று சொல்லும் அளவிற்கு நான் கோவையுடன் ஒன்றிப்போய் உள்ளேன். அதனால் தான் இப்போது கூட நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பரப்புரையிலேயே கோவைக்கு வந்து விட்டேன் என்றார்.
கோவை சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, கோவை வடக்கில் போட்டியிடும் துரை செந்தமிழ்செல்வன், சூலூர் தொகுதியில் போட்டியிடும் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் கே.வி.கே. சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் போட்டியிடும் சுதாகர், பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் நித்தியானந்தன், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். கார்த்திகேயன், மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கவிதா கல்யாண சுந்தரம் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டார்
மேலும் ராகுல் காந்தி அறிவிக்க உள்ள சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளில் காங்கிரஸின் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்
இதைத் தொடர்ந்து கோவையில் கொண்டு வரப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழிப்பூங்கா, உலகத்தரத்திலான ஹாக்கி மைதானம் உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு திமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கி பேசினார்.
