இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தமிழக கடலோர பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் மீன்பிடி தடை காலத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகளையும், 57 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9 ஆவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சி மடத்தில் உள்ள மீனவர்கள் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணியாகச் சென்று மீனவர் கோரிக்கைகளை ஏந்திய பதாகைகளைகளுடன் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து 4 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் – தாம்பரம் ரயில் புறப்படாமல் நிறுத்தப்பட்டது.
போராட்டம் காரணமாக 8 டி.எஸ்.பி., 16 ஆய்வாளர்கள் என 859 போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்தை நடத்தியதால் ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
