’தமிழக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள்’ என நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை எரித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். dmk protest against dharmendra pradhan
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (மார்ச் 10) பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”பிஎம் ஸ்ரீ திட்டத்தை முதலில் தமிழகத்தில் அமல்படுத்துவோம் என்று உறுதியளித்துவிட்டு பின்னர் பின்வாங்கினர். திமுக எம்.பிக்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் என்று கடுமையாக பேசினார்.
மத்திய அமைச்சரின் பேச்சு கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற அவையிலேயே இதுகுறித்து பேசிய கனிமொழி, மும்மொழி கொள்கையை முதலில் தமிழக எம்.பிக்கள் ஏற்று பின்னர் பின்வாங்கியதாக மத்திய அமைச்சர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்று மத்திய அமைச்சரிடம் நாங்கள் தெளிவாக விளக்கினோம் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து ”நான் பேசிய வார்த்தைகள் திமுக எம்.பி-க்களை காயப்படுத்தியிருந்தால் அதனை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்று தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் போராட்டம்! dmk protest against dharmendra pradhan
இதற்கிடையே தமிழக எம்.பிக்களை அவமதிக்கும் வகையில் பேசிய தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை எரித்து சென்னை, கோவை என மாநிலம் முழுவதும் திமுக கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை வழங்காமல், உரிமைக்காக போராடிய தமிழக எம்.பிக்களை இழிவுபடுத்திய தர்மேந்திர பிரதானை பதவி விலகக்கோரியும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் பல்வேறு கோஷங்களுடன் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.