டெல்லியில் உள்ள சிபிஎம் தலைமை அலுவலகத்துக்குள் ’சீருடை அணியாத’ போலீஸ் நுழைந்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சிபிஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எஸ்.எஃப்.ஐ-SFI தலைவரான ஆயிஷே கோஷை கைது செய்வதற்காக, சிபிஎம் (CPIM) தலைமையகமான ஏ.கே.ஜி. பவனுக்குள் நுழைய டெல்லி காவல்துறை மேற்கொண்ட சட்டவிரோத முயற்சி, ஜனநாயக நெறிமுறைகள் மீதான ஒரு ஆபத்தான தாக்குதலாகும்.
காவல்துறையினர் ஒரு தனியார் வாகனத்தில் வந்தனர்; அவர்களில் சிலர் சீருடை கூட அணியவில்லை. ஜான் பிரிட்டாஸ் எம்.பி மற்றும் பிற தோழர்கள் உறுதியாகத் தலையிட்டு அவர்களை எதிர்த்தபோது, அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். கடந்த சில நாட்களாகவே ஆயிஷே கோஷ் தொடர்ந்து பின்தொடரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது; இது மாணவர் தலைவர்களுக்கு எதிரான அப்பட்டமான மிரட்டல் நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மாணவர்களின் நியாயமான பிரச்சனைக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, மாற்றுக் கருத்துக்களைக் குற்றச்செயலாகச் சித்தரிக்கவும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை ஒடுக்கவும் மோடி அரசு காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த மிரட்டல் நடவடிக்கையை சிபிஎம் வன்மையாக கண்டிக்கிறது; ஜனநாயக உரிமைகளை நசுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் உறுதியுடன் எதிர்ப்போம். இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
டெல்லி போலீசாரின் இந்த அத்துமீறலுக்கு சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி., “டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் தொடர்பாக சிபிஐ எம் மாணவர் அமைப்பான எஸ் எஃப் ஐ யின் அகில இந்திய இணைச் செயலாளர் ஆயிஷே கோஷை டெல்லி காவல் துறை கைது செய்ய முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஒருபுறம் வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் எனக் கூறிக்கொண்டே இன்னொரு புறம் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் மோடி அரசின் இரட்டை வேடம் இதில் அம்பலமாகியுள்ளது” என சாடியுள்ளார்.
