பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக இந்தத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் சில விவசாயிகளுக்கு தவணைத் தொகை கிடைக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
நில விவரங்கள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா?
விவசாய நிலத்தின் விவரங்கள் PM கிசான் பதிவுகளில் முறையாக சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படாமல் இருந்தால், தவணைத் தொகை நிறுத்தப்படலாம். எனவே பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் உறுதி செய்ய வேண்டும்.
வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு
PM கிசான் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுவதால், ஆதார் இணைப்பு முக்கியமானதாக உள்ளது. ஆதார் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படாமல் இருந்தால் பணம் வரவு வைக்கப்படுவதில் சிக்கல் ஏற்படலாம். இதுபோன்ற நிலையில் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையை அணுகி இணைப்பைச் சரிபார்க்கலாம்.
e-KYC செய்யாமல் இருந்தால் பணம் வராது
PM கிசான் பயனாளிகளுக்கு e-KYC கட்டாயம். OTP மூலமாக ஆன்லைனிலும், பயோமெட்ரிக் அல்லது முக அங்கீகாரம் மூலமாகவும் e-KYC செய்ய முடியும். அதிகாரப்பூர்வ PM கிசான் தளத்திலும் மொபைல் செயலியிலும் இதற்கான வசதிகள் உள்ளன.
தவணை நிலையை எப்படி பார்ப்பது?
pmkisan.gov.in தளத்தில் Farmers Corner → Know Your Status பகுதிக்குச் சென்று பதிவு எண்ணை உள்ளிடலாம். பதிவு எண் தெரியாவிட்டால், அதே தளத்தில் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி அதை அறிய முடியும். பின்னர் Land Seeding, e-KYC, Aadhaar Bank Seeding Status ஆகிய மூன்று நிலைகளையும் சரிபார்க்க வேண்டும். எந்தப் பகுதியில் “No” என இருந்தாலும், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டால் தவணை பெறுவதற்கான சிக்கலைத் தீர்க்க உதவும்.
