இந்தியாவில் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து (NBFC) தங்கத்தை அடமானமாக வைத்துப் பெறப்படும் கடன்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது சமீபத்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிக்கையில் தெரியவந்துள்ளது. வங்கி சாரா நிதி நிறுவனங்களால் தங்க (Gold) நகைகள் மீது வழங்கப்பட்ட நிலுவைக் கடன்கள் மே மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 70 சதவீதம் அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, தங்க நகைகள் மீதான நிலுவைக் கடன்கள் மே மாத இறுதியில் ரூ.3.29 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் ரூ.1.94 லட்சம் கோடியாக இருந்தது. இது ஓராண்டில் 69.9 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்தப் பிரிவுகளில் கடன்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன
சில்லறை கடன் பிரிவில் வீட்டுக்கடன்கள், வாகனக் கடன்கள் மற்றும் தங்கத்தின் மீதான கடன்கள் ஆகியவை மே மாதத்தில் வலுவான வளர்ச்சியைக் பதிவு செய்தன. மொத்த சில்லறை கடன்கள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 19.5 சதவீதம் வளர்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 14.9 சதவீதமாக இருந்தது. தங்கக் கடன்களைத் தவிர, வங்கி சாரா நிதி நிறுவனங்களால் வணிகத் துறைக்கு வழங்கப்பட்ட நிலுவைக் கடன்கள் இரண்டாவது அதிகபட்ச வளர்ச்சியைப் பதிவு செய்தன. இவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 40.2 சதவீதம் அதிகரித்து, முந்தைய ஆண்டின் ரூ.85,317 கோடியிலிருந்து மே மாதத்தில் ரூ.1.19 லட்சம் கோடியாக உயர்ந்தன.
விவசாயக் கடன்களும் அதிகரிப்பு
தங்கக் கடன்கள், வீட்டுக்கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் தவிர, விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடன்களும் வலுவாக இருந்தன. மே மாதத்தில், இவை ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் பதிவு செய்யப்பட்ட 5 சதவீத வளர்ச்சியை விட அதிகமாகும். ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, தொழில்துறைக்கான கடன் வளர்ச்சி விகிதம் மே மாதத்தில் 7.3 சதவீதமாகக் குறைந்தது. இது முந்தைய ஆண்டில் 10 சதவீதமாக இருந்தது. ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, தங்கக் கடன்கள், குறிப்பாக வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்களின் போக்கு வேகமாக அதிகரித்துள்ளது.
