ADVERTISEMENT

‘காதல் ஒழிக’ சீமான் இயக்கம்… இளையராஜா இசை: பார்த்திபனின் பதிவு சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

காதலர் தினத்தை முன்னிட்டு, நடிகர் பார்த்திபன் தன் இன்ஸ்டா பதிவு வழியாக ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்.

“காதல் ஒழிக… இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காகக் கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு. படம் கை விடப்பட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது.

ADVERTISEMENT

என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும்போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புது தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன் .

இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும், ‘கடவுள் இல்லை’ – பெரியார். ‘பெரியாரே இல்லை’ – சீமான். அவரவரது குரலை உரக்க ஒலிக்கச் செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதைப் பட்டவர்த்தனமாக பேசுகிறேன். (அரசியல் +இன்ன பிற லாப நோக்கின்றி). புரிந்தோர் பிஸ்தாக்கள், புரியாதோர் பிஸ்கோத்துகள்!

ADVERTISEMENT

சரி காதலுக்கு வருவோம்! வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு. வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு! என்றோ பிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும். ‘என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைத்தான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share