மக்களவையில் 2 இளைஞர்கள் வண்ண வெடிகுண்டுகளை வீசி கைதான நிலையில், விசிட்டர்ஸ் பாஸ் முறையை ரத்து செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்து உள்ளார்.
கடந்த டிசம்பர் 4-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22 வரை நடைபெறவுள்ளது.
இன்று (டிசம்பர் 13) நாடாளுமன்ற தாக்குதல் தினம் என்பதால் இதனை முன்னிட்டு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மக்களவை தொடங்கியது. அப்போது திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து பாதுகாப்பு வளையத்தையும் மீறி வண்ண புகை குண்டுகளை அவைக்குள் வீசினர்.
அவர்கள் வீசிய குண்டுகளில் இருந்து மஞ்சள் நிற புகை எழுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த எம்.பி-க்கள் அவர்கள் இருவரையும் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
வண்ண குண்டுகளை வீசிய இரண்டு இளைஞர்களில் ஒருவர் பெயர் சாகர் ஷர்மா, மற்றொருவர் பெயர் மனோரஞ்சன். இதில் மனோரஞ்சன் மைசூரை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும் கூடுதலாக தெரிய வந்துள்ளது.
இதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இரண்டு பெண்கள் வண்ண வெடிகுண்டுகளுடன் போராடினர். விசாரணையில் ஒருவர் பெயர் நீலம் (ஹரியானா) என்பதும், மற்றொருவர் பெயர் அமோல் ஷிண்டே (மகாராஷ்டிரா) என்பதும் தெரிய வந்தது.
Kutai me koi Kami nahi rakhi gayi👍#ParliamentAttack #Parliament #ParliamentofIndia #ParliamentAttack2001 pic.twitter.com/R7L9uJ4DgV
— Sanatani Banda 𝕏 🚩 (@sanskriti_divya) December 13, 2023
இதையடுத்து நாடாளுமன்றத்தை சுற்றியும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கைதான நான்கு பேரிடமும் புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் நான்கு பேரின் சொந்த ஊர்களிலும் விசாரணை நடத்திட புலனாய்வு துறையினர் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ”மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. முதற்கட்ட விசாரணையில் அது வெறும் புகை தான் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அச்சப்பட வேண்டாம். கைதான இளைஞர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது” என கூறினார்.
கைதான இளைஞர்கள் மைசூரை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சின்ஹாவின் விசிட்டர் பாஸ் பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் விசிட்டர்ஸ் பாஸ் முறையை தற்காலிகமாக தடை செய்வதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
இந்த வண்ண வெடிகுண்டு தாக்குதலின் போது பிரதமர் மோடி அவையில் இல்லை. ஆனால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேர் கைது!
தனி ஒருவன் 2 : அரவிந்த் சாமிக்கு பதில் களமிறங்கும் பாலிவுட் ஹீரோ!