சைவ, வைணவ சமயங்களை ஒப்பிட்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ வைணவ சமயங்கள் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இந்த சூழலில் பொன்முடிக்கு எதிராக சென்னை மாநகராட்சி பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் பொன்முடி மீதான வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரபாண்டியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி பொன்முடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பொன்முடியை செப்டம்பர் 2ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்தும் படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு வந்த நிலையில்,பொன்முடிக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
