வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் துறை இயக்குனர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். Order from the Department of School Education
அதில், “2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிக பணி நீக்கமும் பணி காலமாக முறைப்படுத்தப்படுகிறது.
போராட்டம் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின்போது உரிய முன்னுரிமை வழங்க பள்ளி கல்வி துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பல்வெறு கட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொடரப்பட்ட வழக்குகளால் பதவி உயர்வு பெறுவதில் இருந்த சிக்கல், பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலில் இருந்து இந்த ஆணை மூலம் விடியல் கிடைத்துள்ளது” என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார். Order from the Department of School Education