மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பா.ம.க. ஆதரவு இல்லை என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் இரு தொகுதிகள் அடங்கிய மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் நடத்திய கலந்தாய்வுகளின் முடிவில், எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து பாமக தேர்தலை சந்தித்தது. மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற பாமகவினரும் கள பணிகள் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தவெகவில் இணைந்த நிலையில், இதற்கு பாமக தலைமை கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
