நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கிய சுமார் 2,000 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி உள்ளது. அதேநேரத்தில் காணாமல் போனோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
நேபாள நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் புள்ளி விவரங்களின்படி, வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை சுமார் 1,924 என பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை திடீரென இரு மடங்காக காரணம், வெள்ளத்தால் சேதமடைந்த நீர்மின் நிலையங்களில் பணியாற்றிய 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலவரம் தெரியாமல் போனதுதான் என்கின்றனர் அந்நாட்டு அதிகாரிகள்.
காணாமல் போனவர்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், கைலாய மலைப் பகுதிக்குச் சென்று திரும்பிய ஆன்மீகப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் அடங்குவர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13 நீர்மின் நிலையங்களில், குறிப்பாக ‘அப்பர் திரிசூலி-1’ உள்ளிட்ட பல முக்கிய திட்டப் பகுதிகளில் பணிபுரிந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் கதி இந்த நிமிடம் வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
கட்டுமானத்தில் இருந்த நீர்மின் சுரங்கங்களுக்குள்ளும், மின் நிலைய வளாகங்களுக்குள்ளும் தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐ.நா சபையின் தகவல்படி, மீட்புப் பணிகளுக்காக 30,000-க்கும் மேற்பட்ட நேபாளப் பாதுகாப்புப் படையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,700 முதல் 4,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
