நேபாளப் பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,344 ஆக அதிகரித்துள்ளது. இப்பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 5,053 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை:
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு நீர்மின் திட்டப் பகுதிகளில் ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
திரிசூலி 3-A நீர்மின் திட்ட பகுதியில் நேபாள ராணுவம், ஆயுத காவல் படையினர் இணைந்து இதுவரை 2 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
திரிசூலி 3-B மற்றும் மேல் திரிசூலி 1 திட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் எக்சவேட்டர்கள் இறக்கப்பட்டு, சுரங்கங்களுக்குள் பல நூறு மீட்டர் ஆழம் வரை சென்று மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிலிமே, ரசுவாகி மற்றும் லாங்டாங் திட்ட பகுதிகளிலும் ராணுவம், வெளிநாட்டு நிபுணர் குழுக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
காவல்துறையின் மோப்ப நாய் படைகளும், ட்ரோன் கருவிகளைக் கொண்ட காட்சி ஊடக நிபுணர் குழுவினரும் நதிக்கரைகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 21,421 பாதுகாப்புப் பணியாளர்கள் மீட்புப் பணிகளுக்காகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் பேரிடர் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 40 அவசரகால முகாம்களில் மொத்தம் 3,873 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் ரசுவாவில் 1,085 பேரும், நுவாகோட்டில் 2,572 பேரும், தாதிங்கில் 216 பேரும் அடங்குவர்.
பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்; 70 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணபீர் பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக முக்லிங் – மலேகு நெடுஞ்சாலைப் போக்குவரத்து முழுமையாகத் தடைபட்டுள்ள நிலையில், மலையின் பக்கவாட்டில் புதிய பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும், காத்மாண்டுவை இணைக்கும் பல்வேறு மாற்றுப் பாதைகளும், தாதிங் மாவட்டத்துக்கான சாலைத் தொடர்புகளும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை மீட்டெடுக்க நேபாள டெலிகாம் மற்றும் என்செல் நிறுவனங்களின் டவர்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், நிவாரணப் பணிகளுக்காகச் செயற்கைக்கோள் தொலைபேசிகள் (Satellite Phones) மற்றும் இணைய முனையங்கள் மாவட்ட நிர்வாக அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நுவாகோட் மற்றும் ரசுவா மாவட்டங்களின் பெரும்பகுதிக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதுடன், அவசரகாலத் தேவைகளுக்காக சோலார் அமைப்புகளும் எரிபொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேரிடரில் மொத்தம் 1,344 பேர் உயிரிழந்துள்ளனர். 18 சுகாதார நிலையங்களில் மொத்தம் 311 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 70 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர், 30 பேர் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர், மற்றும் 207 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 5,053 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 88% பேர் உள்நாட்டினர், 12% வெளிநாட்டினர்.
கோர்க்காவில் 359; தாடிங்கில் 221; சித்வனில் 212; கிழக்கு நவல்பராசியில் 184; மேற்கு நவல்பராசியில் 140; நுவாகோட்டில் 38 மற்றும் ரசுவாவிலும் சிலர் காணாமல் போயுள்ளனர்.
