பிரதமர் நரேந்திர மோடி உத்தராகண்ட் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை முன்னிட்டு புகழ்பெற்ற கேதர்நாத், பத்ரிநாத் கோயில்களில் மோடி இன்று (அக்டோபர் 21 ) தரிசனம் மேற்கொண்டார்.
பிரதமராக பதவியேற்ற பின், மோடி தற்போது ஆறாவது முறையாக கேதர்நாத்திற்கும், இரண்டாவது முறையாக பத்ரிநாத் ஆலயத்திற்கும் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கேதார்நாத் கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, அங்கு எடுத்த புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,”மிகப்பெரும் மலையோரங்களை ரசித்தேன். அங்கிருந்த முனிவர்களையும் வணங்கினேன். தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், பெரும் பாம்புகளால் சூழப்பட்ட சிவபெருமானை நான் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கேதர்நாத் கோயிலில் பூஜை மேற்கொண்ட பிரதமர் மோடி, கௌரிகுண்ட் – கேதார்நாத் 9.7 கி.மீ தூரத்திற்கான ரோப்கார் சேவை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதன்மூலம், கௌரிகுண்ட் பகுதியில் இருந்து கேதர்நாத் கோயிலை பக்தர்கள் அரைமணி நேரத்தில் அடைந்துவிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆதி சங்கரரின் சமாதியிலும் பிரதமர் வழிபட்டார்.
ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் தரிசனத்தை முடித்த பின்னர், சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்கு புறப்பட்டார்.
பத்ரிநாத் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கு இடையே சாலை மற்றும் ரோப்கார் சேவைக்கான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டங்கள் 3,400 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மதுரை மருத்துவக் கல்லூரி கட்டடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறப்பு!
ஆக்டிவ் அரசியலுக்குத் திரும்பும் ஆளுநர் தமிழிசை: வழிகாட்டும் பேபிராணி
