புதுக்கோட்டை அருகே இன்று (டிசம்பர் 30) அதிகாலை சாலையோரம் நின்று டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நமணசமுத்திரம் அருகே திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 30) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில்,
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பனஞ்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 60), சாந்தி (வயது 55), திருமுல்லைவாயில் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 26), சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த சதீஷ் (வயது 25) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர், அன்னை இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 39) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்,
இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
