மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்ட மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாதது சர்ச்சையாகி உள்ளது.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, அன்புமணி பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் மதுராந்தகத்தில் குவிந்துள்ளனர்.
இந்தப் பொதுக் கூட்ட மேடையில் ஒரு பக்கம் மோடி படமும் மற்றொரு பக்கம் எடப்பாடி படமும் இடம் பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வரிசையில் அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், பாரிவேந்தர், ஏசி சண்முகம், ஜான்பாண்டியன், திருமுருகன்ஜி, ஜெகன் மூர்த்தி, தனபால், செல்லமுத்து ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் இடம் பெறவில்லை. அதிமுக பங்கேற்கும் கூட்டணியில் அக்கட்சியின் தலைவர்கள் படம் இடம் பெறாதது ஏன்? என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல, பாமகவின் மாம்பழம் சின்னம் யாருக்கு என்பது முடிவாகாத நிலையில் அன்புமணி பங்கேற்கும் இந்த கூட்டத்தின் பேனரில் மாம்பழம் சின்னம் இடம் பெற்றிருப்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.
