கரூரில் தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூரனை அச்சிறுமியின் பாட்டி ஓட ஓட வெட்டியுள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குண்டாங்கல்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் தனது 4 வயது மகளை, சிறுமியின் பாட்டி வீட்டில் விட்டு விடச் சொல்லி அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர், தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
இதனால் பயந்துபோன சிறுமி.நடந்ததை பாட்டியிடம் கூற, கோபமடைந்த அவர் அரிவாளுடன் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று குளித்தலை பகுதியில் மாணிக்கம் கட்டிட வேலை பார்த்து வருவதாக அந்த பாட்டிக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
இதை அறிந்து அங்கு சென்ற அவர் மாணிக்கத்தை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.
இதனால் மாணிக்கத்துக்கு உடலில் 10 இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சுற்றி இருந்தவர்களும் என்ன நடந்தது என பாட்டியிடம் விசாரித்துவிட்டு, அவர்களும் மாணிக்கத்தை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரிடம் மாணிக்கத்தை ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரை வெட்டிய சிறுமியின் பாட்டியையும் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதுபோன்று அரிவாளால் வெட்டுப்பட்ட மாணிக்கம் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
4 வயது சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததும், அவரை சிறுமியின் பாட்டி விரட்டி விரட்டி வெட்டியதும் குளித்தலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
