4 புதிய மாநகராட்சிகள் : முதல்வர் அறிவிப்பு!

Published On:

| By Kavi

municipalities will be upgraded as municipal corporations

municipalities will be upgraded as municipal corporations

காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ‘நகர்ப்புர பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்குச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க தமிழ்நாட்டில் 2 நகராட்சிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ளது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர். கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமெனப் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், மாநகராட்சிகளை அமைத்துருவாக்குதற்கான 4 புதிய நடைமுறைகளைத் தொடங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி; திருவண்ணாமலை நகராட்சி ஆகியவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி;

நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி:

காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி, என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து இன்று (15.3.2024) ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்துருவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தேர்தல் ஆணையர்கள் நியமனம்..தடை விதிக்க முடியாது..ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

ராகுல் காந்தி யாத்திரையின் தாக்கமே பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஜெய்ராம் ரமேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share