இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய திருப்பமாக, JSW குழுமமும் Volkswagen குழுமமும் இணைந்து செயல்படுவதற்கான 51:49 கூட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதற்காக இரு நிறுவனங்களும் கட்டுப்பாடற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன. இதையடுத்து நிறுவனங்களின் மதிப்பீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பாக பிரத்யேக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.
புதிய நிறுவனத்தின் கீழ் செயல்பாடு
இந்தக் கூட்டணி உருவானால், JSW மற்றும் Volkswagen-ன் இந்தியப் பிரிவான Skoda Auto Volkswagen India ஆகியவற்றுக்கு இடையேயான புதிய நிறுவனமாக அது செயல்படும். JSW ஏற்கனவே வைத்துள்ள MG Motor கூட்டணியிலிருந்து இது தனித்துவமாக இருக்கும்.
இந்தியாவில் Volkswagen, Skoda உள்ளிட்ட பிராண்டுகளின் தற்போதைய விற்பனை மற்றும் எதிர்கால மின்சார வாகனத் திட்டங்களும் கூட்டணியின் வரம்புக்குள் வர உள்ளன. பின்னர் Audi, Porsche, Lamborghini, Bentley போன்ற பிராண்டுகளையும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.20,000 கோடி வரி விவகாரம்
இந்த ஒப்பந்தத்தில் நிறுவன மதிப்பீடு முக்கியமான கட்டமாக உள்ளது. Volkswagen-ன் இந்திய செயல்பாடுகளுடன் தொடர்புடைய சுங்க வரி விவகாரத்தில் சுமார் ரூ.20,000 கோடி வரை வரி பொறுப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பொறுப்பை JSW ஏற்க வாய்ப்பில்லை என்பதால், நிறுவனத்தின் இறுதி மதிப்பீட்டில் இந்த விவகாரம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. Volkswagen நிறுவனம் டிசம்பரில் இதற்கான திட்டத்தை தனது நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்க இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா ஏற்றுமதி மையமாகுமா?
சம்பாஜிநகர் மற்றும் சக்கன் ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் வாகனங்கள். ஆனால் தற்போதைய விற்பனை சுமார் ஒரு லட்சம் என்ற நிலையில் உள்ளது.
இதனால் இந்தியாவை குறிப்பாக மின்சார வாகனங்களுக்கான ஏற்றுமதி மையமாக மாற்ற இரு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. உற்பத்தித் திறனை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் செலவைக் குறைத்து, இந்திய சந்தையில் போட்டித்திறனை அதிகரிப்பதே இந்த கூட்டணியின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
